போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் 'ரஸாயன'ங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சாரச் சிகிச்சை'யளிக்கும் புத்தம்புது முறைகளை, குரூர வசீகரங்களைப் படம்பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த - இருந்து வருகிற 'மனித மிருக'ங்களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழி தேட முயலும் நவயுகக் கதைகளை இன்று போல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும்; தமிழ் நாட்டை மேம்படுத்த வேண்டும் - இதுவே என் எண்ணம்; இதுவே என் இருபது வருட கால எழுத்து.
-விந்தன்
1942 முதல் 1975 வரையில் வணிக நோக்குடைய பல பத்திரிகைகளில் இலக்கிய நோக்குடன் ஏராளமான கதைகளை எழுதியுள்ளார் விந்தன். அக்கதைகளில் சிகரமாகவும் சிறப்புடையதுமான கதைகளைத் தேர்வு செய்து தரப்பட்டுள்ளது.
தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் விந்தன் கதைகள் பரவிய காலத்தில், இந்திய மொழிகளில் சிலவற்றிலும் ருஷ்யா, செக்கோஸ்லேவியா ஆகிய மொழிகளிலும் விந்தன் கதைகள் பிரசுரம் ஆகின.
விந்தன் கதைகளில் உள்ள தனிச் சிறப்பு, அவர் ஏழை எளியவர்களைப் பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைப் பற்றியும் எழுதியதோடு நடுத்தர மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றியும், அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடியால் உண்டாகும் சிக்கல்களை, குடும்பச் சிதைவுகளை, காதல் தோல்விகளை, தாம்பத்திய முறிவுகளை அனைத்துக்கும் மேலாக நசிந்து வரும் மனித நேயத்தை யதார்த்தமாகவும் எள்ளல் தன்மையுடனும் எளிய தமிழிலும் எழுதியிருப்பது தான்.
- மு.பரமசிவம்
(தொகுப்பாசிரியர்)
Be the first to rate this book.