இராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை.
அதே போல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்று விடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே, 'உத்தர காண்டம்' என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடிவெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை, சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர்.
காந்தியடிகள் கண்ட சுயராச்சிய, கிராம ராச்சியக் கனவுகள், தனிமனிதத் தூய்மை, ஒழுக்கப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் அந்த வரையறைகள் மெல்ல மெல்ல, தனனலம், பதவி, புகழ் ஆகிய பூச்சிகளால் அழிக்கப் பெற்றன. அதே பூச்சிகள், மனித வாழ்வியலின் அனைத்து நல்லணுக்களையும் விழுங்கி, புற்று வளர்ச்சி போன்றதொரு சமுதாய வளர்ச்சியை, மேன்மையைத் தோற்றுவித்திருக்கிறது. வாழ்க்கை வசதிகள் ஏராளம். ஆனாலும் அடிப்படை வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில், நான் இந்தப் புதினத்தை எழுதுவதற்கான உந்துதல் பெற்றதற்கொரு காரணம் உண்டு.
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம் கிருஷ்ணன் உலகம் போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்!
Be the first to rate this book.