தோழர் தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி. பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி. முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.
தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.
‘தோழர் தமிழ்ஒளி: ஆய்வுகள் – கட்டுரைகள் – தன் வரலாறு’ எனும் இத்தொகுதி 13 ஆக்கங்களை உள்ளடக்கியது. தமிழ்ஒளி குறித்து தமிழ்ச் சமூகம் அறியாத பல செய்திகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த தமிழ்ஒளி செய்துள்ள ஆய்வுகள் காத்திரமானவை. பாரதி, புதுமைப்பித்தன். ரகுநாதன் ஆகியோர் குறித்தப் பதிவுகள் உள்ளன. அவரே பதிவுசெய்த அவரது வாழ்க்கைக் குறிப்புகள், அவரது அரசியல் கருத்துநிலை குறித்து அறிய உதவும் கடிதம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
‘தோழர் தமிழ்ஒளி: சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள்’ என்னும் இத்தொகுதியில் 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 18 ஓரங்க நாடகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. விந்தன், ஜெயகாந்தன் சிறுகதை மரபில் தமிழ்ஒளி செயல்பட்டிருக்கிறார். அரசியல் பகடியாக ஓரங்க நாடகங்களை தமிழ்ஒளி உருவாக்கியுள்ளார்.
‘தோழர் தமிழ்ஒளி: சிறார் பாடல்கள் கதைகள்’ என்னும் இத்தொகுதியில் 122 சிறார் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 121 குறுங்கதைகளும் இரண்டு அல்புனைவுகளும் இடம்பெற்றுள்ளன. தி.ஜ. ரங்கநாதன், விந்தன், தமிழ்ஒளி எனும் சிறார் ஆக்க மரபு வளமைமிக்கது.
‘தோழர் தமிழ்ஒளி: காவியங்கள்’ என்னும் இத்தொகுதி முதல் பாகமாக அமைகிறது. தமிழ்ஒளி எழுதிய ஐந்து காவியங்கள் மட்டும் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று காவியங்கள் 1947-1948 காலங்களில் எழுதியவை. உழைக்கும் மக்களைப் பாத்திரங்களாக கொண்ட காவியங்கள் இவை.
தோழர் தமிழ்ஒளி: காவியங்கள்’ என்னும் இத்தொகுதி இரண்டாம் பாகமாக அமைகிறது. இதில் மூன்று காவியங்கள் இடம்பெற்றுள்ளன. 1957 இல் எழுதிய மாதவி காவியம் 1995 இல் அச்சு வடிவம் பெற்றது. இந்த காவியம் இருபதாம் நூற்றாண்டில் உருவான தலைசிறந்த காவியம் என்று சொல்லலாம்.
‘தோழர் தமிழ்ஒளி: கவிதைகள்’ என்னும் இத்தொகுதியில் 128 கவிதைகள், ஒரு சிறு காப்பியம் இடம்பெற்றுள்ளது. 1944-1965 இடைப்பட்ட காலங்களில் இக்கவிதைகளைத் தமிழ்ஒளி எழுதினார். கால ஒழுங்கிலும் பொருண்மை சார்ந்தும் இக்கவிதைகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.