செந்தமிழ்ச் செல்வர் என்று போற்றப்படும் சிறப்புக்கு உரியவர் பெரியசாமி தூரன் அவர்கள். இவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிப்பெரும் சாதனை என்று கருதப்படும் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் ஆசிரியராக இருந்தவர். இவர் இதழாளராகவும், இலக்கியப் படைப்பாளியாகவும் திகழ்ந்தவர். மகாகவி பாரதியைப் பல்வேறு கோணங்களில் தமிழ்மக்களுக்கு அறிமுகம் செய்தவர். தமிழிசை வளர்ச்சிக்கும் பாடுபட்டவர். இவர் இளந்தமிழா, மின்னல்பூ, நிலாப்பிஞ்சு, பட்டிப் பறவைகள் முதலிய கவிதை நூல்களைப் படைத்து அளித்துள்ளார். அக்கவிதைகளோடு தியாகம், வீரன், குமரன், கிழவியும் ராணாவும், பிருதிவிராஜ் சம்யுக்தை முதலிய சிறிய கவிதைகளையும் எழுதியுள்ளார். இவை அனைத்தையும் தொகுத்து 'தூரன் கவிதைகள்' என்னும் இந்நூலாக வெளிவருகிறது.
ரதிக்குப் பின்பு வசன கவிதை முயற்சியில் ஈடுபட்டவர்களில் இவரும் ஒருவர், புதுக்கவிதையின் சாயல் கொண்ட கவிதைகளும், இசைப்பாடல் வடிவிலான கவிதைகளும், நாட்டுப்புற வடிவிலமைந்த கவிதைகளும் இந்நூலில் நிறைந்துள்ளன. உரையாடல் வடிவிலான 'ஓடக்காரன்', இசைப்பாடல் வடிவிலான உள்ளம் தளராதே', நாட்டுப்பாடல் வடிவில் அமைந்த 'கைவளம்' முதலான கவிதைகளை நாம் எடுத்துக்காட்டலாம். இவற்றோடு காதலிக்குக் கடிதம், பதில் கடிதம் என கடித வடிவில் கவிதைகளை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்.
Be the first to rate this book.