அல் அஹ்ஸாப் அத்தியாயத்திற்க்கான விளக்கங்களை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் மக்கள் புரிந்து தெளிவு பெறும் விதத்தில் எழுதியுள்ளார்கள். உதாரணமாக 21வது வசனத்தில் ‘அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது (இருக்கிறது)’ என்பதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக ‘அல்லாஹ், நபிகளார் (ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று அறுதியிட்டு அழுத்தம்திருத்தமாக அறிவித்திருக்கிறான். மேலும், ஒவ்வொரு முஸ்லிமும் தம்முடைய வாழ்வின் எல்லா விவகாரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நபிகளாரைத் தமக்கான முன்மாதிரியாகக் கருத வேண்டும், நபிகளாரின் அழகிய முன்மாதிரிக்கேற்ப தம்முடைய நடத்தையையும் வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும். இவைகளே அழகிய முன்மாதிரிக்கு அவசியமானது’ என்று குறிப்பிட்டு நமது நிகழ்கால நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டுமென்று நினைவுறுத்தியுள்ளார்கள்.
22 வது வசனத்தில் ‘இந்நிகழ்ச்சி நம்பிக்கையையும் அடிபணிதலையும் அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டது’ என்பதற்கு ‘அந்த சோதனைப் புயலைப் பார்த்தபோது அவர்களின் நம்பிக்கை ஆட்டம் காண்பதற்குப் பதிலாக அது இன்னும் அதிகமாக வலுப்பெற்றது. மேலும் அவர்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதிலிருந்து புறமுதுகிட்டு ஓடுவதற்குப் பதிலாக இன்னும் அதிகமான நம்பிக்கையோடும் மனநிறைவோடும் தம்மிடம் இருந்த அனைத்தையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவதற்கும் ஆயத்தமாகிவிட்டார்கள்’ என்று தொடங்கி இறைநம்பிக்கையும் அடிபணிதலும் என்ன என்பதை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்கள்.
Be the first to rate this book.