புலவர் கா.கோவிந்தன் (15 ஏப்ரல் 1914 2 ஜூலை 1991) தமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் ஆவார். கா. கோவிந்தனார் 1935-இல் காவிரி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதற்கண் வெளிவரச் செய்தவர். புலவரின் முதல் நூலான திருமாவளவன் என்னும் நூல் 1951 இல் வெளிவந்தது. அதன் பிறகு சங்க காலப் புலவர் வரிசை என்ற வரிசையில் 16 நூல்களையும் அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார். புலவர் வரிசையின் முதல்நூல் 1952 லும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955-லும் வெளிவந்தன. 1990 ஏப்ரல் 15 இல் புலவரின் ஐம்பதாவது நூலான பி.டி.சீனிவாச ஐயங்காரின் தமிழர் வரலாறு வெளிவந்தது. 1991 இல் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Origin and Spread Tamils என்ற நூலைத் தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற பெயரில் புலவர் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். பி.டி.சீனிவாச ஐயங்காரின் Pre Aryan Tamil Culture என்பதை ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர். புலவர் அவர்களின் பணியை மூன்று வகையில் வகைப்படுத்தலாம். சங்க இலக்கிய ஆய்வுப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, அரசியல் பணி என்பதே அப்பகுப்பு.
"திருமாவளவன் தமிழ் அரசர்கள் அனைவர் வரலாற்றையும் ஆராயந்து வெளியிடுவதற்குமுன் கரிகாலன் வரலாற்றை மட்டும் ஆராய்ந்து முதற்கண் வெளியிடுதல், பின்னூல்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என்று எண்ணி, கரிகாலன் வரலாறு குறித்து, அறிஞர் பெருமக்கள் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் எல்லாவற்றையும் ஒருங்கு கொணர்ந்து ஒப்புநோக்கிப் படித்ததில், அவர்கள் அனைவரும். கரிகாலன் வரலாற்றில் ஒரு பகுதியை உண்மை என ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளனர் எனில், மற்றையோர் ஒப்புக்கொள்ளாது மாறுபட்டுள்ளனர் என்ற நிலைமையையே மேற்கொண்டுள்ளனர் என்பது புலனாயிற்று. ஆகவே, அவர்கள் ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்கள் அனைத்தையும் நடுநிலைமைக் கண் நின்று ஆராய்ந்து, கரிகாலன் வரலாற்றை முடிவுசெய்தல் நலம் என்றே இப்பணியை மேற்கொண்டேன்.
Be the first to rate this book.