தமிழின் தீவிர எழுத்தாளர்கள் வெகுசனத் திரைப்படங்களை புறக்கணித்த காலத்திலேயே அவற்றைப் பொருட்படுத்தி எழுதியவர் அசோகமித்திரன். ஜெமினி ஸ்டூடியோவில்
பதினேழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரைப்படம் தயாரிப்பை அறிந்தவர். உலக சினிமாவைப் பார்த்தவர். திரைப்பட விழாக்களுக்குச் சென்றவர்.
தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்தவர். இவை அனைத்தும் அவருடைய படைப்பூக்கத்தோடு இணைந்து இக்கட்டுரைகளில் வெளிப்படுகின்றன.
திரைப்படங்கள், திரைப்பட ஆளுமைகள், திரைப்பட விழாக்கள் எனப் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் அசோகமித்திரனின் பார்வைகளை இந்த நூலில் காணலாம்.
துல்லியமான அவதானிப்பு, இழையோடும் அங்கதம், பொதுப்புத்தியிலிருந்து இயல்பாகவே விலகி நிற்கும் அணுகுமுறை ஆகியவை இந்தக் கட்டுரைகளின் சிறப்புகள்.
“தமிழ்ப் படங்களை விமர்சிப்பது எளிது; பல சமயம் கதைச் சுருக்கத்தைச் சொன்னாலே போதும்” என்று ஓரிடத்தில் எழுதுகிறார். தமிழில் கலாபூர்வமான படங்கள் ஏன்
வருவதில்லை என்பது குறித்த ஆழமான அலசலும் இந்நூலில் உள்ளது.
ஒரு காலகட்டத்தின் திரைப்படங்களையும் திரை ஆளுமைகளையும் சற்றே விலகி நின்றுஅணுகும் அசோகமித்திரனின் திரைப் பார்வைகள் அவருடைய புனைகதைகளைப்
போலவே வாழ்க்கையை நுட்பமாகக் காட்டுகின்றன; சுவையான வாசிப்பு அனுபவத்தையும் வழங்குகின்றன.
Be the first to rate this book.