மாபெரும் சிறை
மாபெரும் மயானம்
மாபெரும் மருத்துவமனை
மூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள்
தேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டினி இவ்வளவையும் உலகுக்குத் தெரியப்படுத்த, ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக்கொண்ட காஸா இளம் பெண்களின் படைப்புகள்தான் இவை. ஆனால் அவர்கள் எழுதுவதற்கு இதுவல்ல பிரதானக் காரணம்.
‘பாலஸ்தீன்’ என்றொரு நாடு இருந்தது. அதை ஆக்கிரமித்தே ‘இஸ்ரேல்’ என்றொரு நாடு உருவாக்கப்பட்டது என்பதைச் சர்வதேசச் சமூகத்திற்கு நினைவூட்டிக் கொண்டிருக்கவே எழுதுகிறார்கள். வலியும் மரணமும் எவ்வளவுதான் தொடர்ந்தாலும் இஸ்ரேல் முன் மண்டியிட மாட்டோம் என காஸா உறுதியாக இருப்பதை மையச் சரடாகக் கொண்டிருக்கின்றன இந்தக் கதைகள். மட்டுமல்ல, இஸ்ரேல் இராணுவ வீரர்களின் சிதைந்த உளவியல் கூறுகளையும்கூட படம்பிடித்துக் காட்டுறது.
பாலஸ்தீனியர்களின் அவலங்களைச் சர்வதேசச் சமூகத்திற்குச் சொல்ல ஏன் சிறுகதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்?
ஏனெனில், கதை சொல்வது பாலஸ்தீனிய தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் கட்டமைக்க உதவுகிறது. ஏனெனில், மீட்கப்பட வேண்டிய ஒரு பாலஸ்தீனம் உள்ளது, தற்போதைக்குப் பிரதிகளினூடாக. ஏனெனில், பாலஸ்தீன் ஒரு சிறுகதையின் நீளத்தில் உள்ளது. கற்பனையின் சக்தி ஒரு புதிய உண்மையைக் கட்டமைப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழியாகும். ஏனெனில், எழுதுவது ஒரு தேசியக் கடமை, மனித குலத்திற்கான கடமை, மேலும் அது ஒரு தார்மீகப் பொறுப்பு.
Be the first to rate this book.