இலக்கிய வரலாறு என்பது இலக்கியத்தின் தோற்றம் முதல் தற்கால இலக்கியப் படைப்பாளிகளையும் படைப்புகளையும் இணைத்தே உருவாக்கப்படுவது. உரைநடையின் வளர்ச்சிக்குப் பின்னான இலக்கிய வகைமைகளும் படைப்பாளிகளும் கணக்கில் அடங்காது பெருகி உள்ள இக்காலகட்டத்தில், தற்கால இலக்கிய வரலாறு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இக்காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்து போன, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளுமைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியம்.
தமிழ் மொழி இலக்கிய இலக்கணங்கள் நிறைந்த மொழி. காலந்தோறும் தமிழ் மொழியில் வளர்ந்து வரும் இலக்கியங்களைப் பற்றி அவ்வப்போது பதிவு செய்வது இலக்கிய வரலாறு எழுதுவதற்கு உறுதுணையாக அமையும். சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என்று வளர்ந்த தமிழ் மொழியின் இலக்கிய வகைமைகள் உரைநடையின் தோற்றத்திற்குப் பின் புதுக்கவிதை. சிறுகதை, நாவல், கட்டுரை, முதலான பல்வேறு வகைமைகளில் வளரத் துவங்கின. அச்சு இயந்திரத்தின் வருகை இத்தகைய இலக்கியங்கள் வளர்வதற்குப் பெருந்துணை புரிந்தன.
Be the first to rate this book.