குழந்தைகள் பூமியில் உதிக்கும் மாயாஜாலப் பூக்கள். அந்தப் பூக்களுக்குள் ஏராளமான விந்தைகள் ஒளிந்துள்ளன. தொப்பிக்குள்ளிருந்து முயலை வரவைப்பது போல, பூக்களுக்குள் ஒளிந்திருக்கும் வித்தைகளை எல்லோருக்கும் எடுத்துக் காண்பிக்க, மந்திரவாதி(Magician) தேவை. அத்தகைய மந்திரவாதிகள்தான் சிறார் எழுத்தாளர்கள். நிகழ்வை நடத்தும் மந்திரவாதி, பார்வையாளர்களையும் மேடைக்கு அழைத்து வித்தையில் பங்கேற்பாளராக மாற்றுவது போல, சிறார் கதைகளைப் படைப்போரும் படிப்போரும் ஒரே நேரத்தில் உற்சாகத்தில் திளைக்கின்றனர். இங்கே தர்க்கத்துக்கு இடமில்லை. ‘இது எப்படி இங்கே நடக்கும்? அது எப்படிப் பேசும்?’ என்ற கேள்விகள் தேவையில்லை. இன்னொரு முக்கியமான விஷயம், மந்திர வித்தைகள் போல, சிறார் படைப்பு என்பது கண்கட்டு வித்தையல்ல. அதை நிகழ்த்துபவர்கள் கண்கட்டு விந்தைக்காரர்களும் அல்ல. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உள்ள கற்பனை ஆற்றலுடன் கூடிய பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து வருபவர்கள். இந்த வித்தையில் பங்கேற்ற குழந்தை இன்னொரு மந்திரவாதி ஆகிறது.
எழுத்து என்றல்ல, அந்தக் குழந்தைகள் வேறு எந்தத் துறைக்குச் சென்றாலும், அந்தத் துறைக்கான மந்திரவாதி ஆகின்றனர். அந்தத் துறைக்கான பல்வேறு விந்தைகளைப் படைக்கின்றனர். ஆகவே, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எந்த மேடையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து அதை நோக்கி அழைத்துச் செல்லுங்கள். ஆனால், வழியில் வாசிப்பு மேடைக்கு முன்பு நிறுத்தி பார்வையாளராக்குங்கள். அதன் அற்புதத்தை எதிர்காலத்தில் உணர்வீர்கள். இந்தப் புத்தகத்தில் 31 மந்திரவாதிகள், தங்களது மந்திரக்கோல்களைச் குழற்றியுள்ளனர். அதிலிருந்து வெளிப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வித்தையால் குழந்தைகளை மகிழ்விக்கிறது. வித்தையில் திளைத்து, எழுத்து வித்தகராகவும் மாறலாம். வேறு எங்கும் எதிலும் வித்தைக்காரர்களாக ஆகலாம்.
இளம் எழுத்தாளர் ப. ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி, கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருது, ராவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu-2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாதெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர், கலைஞர், மக்கள், பொதிகை, ஜிதமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்திய வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.