இரா. குமார்
தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். இதழியல் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சிறந்த இலக்கியவாதி. கடலூர் மாவட்டம் திருமுட்டம் அடுத்த கீழப்புளியங்குடி என்ற சிற்றூரில் வேளாண் குடும்பத்தில் திரு இராமசாமி - திருமதி பராசக்தி இணையரின் மகனாக 1959 ஆகஸ்ட் 6ஆம் நாள் பிறந்தவர். தமிழ் இலக்கியம் படித்தவர். கல்லூரிக் காலத்திலேயே இருட்டுச் சுவடு என்ற புதுக்கவிதை நூலை எழுதி வெளியிட்டவர். பின்னர் பெரியபுராணம் முழுமையும் புதுக்கவிதை நடையில் எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். சிலப்பதிகாரம் காப்பியத்தை புதுக்கவிதை நடையில் எழுதி ‘செம்மொழிச் சிலம்பு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். திருவாசகக் கருத்துகளை வைத்து, சிவன் மீது 100 பாடல்களை எழுதி இவர் வெளியிட்ட ‘சிவவாசகம்’ நூல் சிவ பக்தர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுவயதிலேயே கலைஞரின் தமிழால் ஈர்க்கப்பட்டவர். கலைஞரின் பேச்சைக் கேட்டும் அவரின் எழுத்துகளை வாசித்தும் தமிழ் மொழிப்பற்றும் இனப்பற்றும் வரப்பெற்றவர். திராவிட இயக்கக் கருத்தியலில் இறுக்கமான பற்றுக்கொண்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் கலைஞர் கொண்டுவந்த சட்டங்கள், திட்டங்கள், சாதனைகளை விளக்கி, ‘‘கலைஞர் 100” நூலை எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சித் திறன், அணுகுமுறை, மக்களைக் காக்கும் மாண்பு, சாதனைகள் குறித்து ஆய்வு நோக்கில், ‘நடையில் நின்றுயர் நாயகன்’ என்ற நூலை எழுதியுள்ளார். மகளிர் முன்னேற்றத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களை விளக்கி, ‘‘தாயுமானவர்” என்ற நூலைப் படைத்துள்ளார்
Be the first to rate this book.