உணவு என்பது உயிரின் முதற்தேவை. உலகப் பொதுவுணர்வு. உண்ணார் யாருமில்லாத உலகமிது. இமைக்காத தெய்வங்கள் கூட உண்ணாமல் இருப்பதில்லை. இறை கூட இரையெடுக்கும் பண்பாட்டுக் கூட்டத்தில், இறந்தோர்க்கும் உண்டி படைக்கும் பழக்கவழக்கத்தில், உணவின் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முயற்சிதான் 'சுவீட் காரம் காப்பி' சிறுகதைகள். எளிய மனிதர்கள் ஒவ்வொருவரும் எழுதப்படாத இலக்கியங்கள். அந்த இலக்கியங்களை எளிய கதைகளாகச் சொன்னதன் தொகுப்புதான் இது. இன்னும் இன்னும் நிறைய எழுதலாம்தான். விருந்தும் அருந்தும் அளவைப் பொருத்து மருந்தும் ஆகிவிடும். ஆகையால் பதினேழு சிறுகதைகள் மட்டும் இத்தொகுப்பில். இந்தக் கதைகளை சமைத்தவன் ரசித்து மகிழ்ந்தது போல, அருந்துகின்றவரும் ருசித்து மகிழ்வர் என்பது நம்பிக்கை. கதைகளில் படிமங்களும் செழுமிலக்கிய விழுமியங்களும் இருக்குமோ இல்லையோ உணர்விருக்கும். உணவிருக்கும். மனிதர்கள் இருப்பார்கள். அம்மனிதர்கள் உங்கள் உள்ளத்தில் உட்கார்ந்து கொள்ள இடமும் கேட்பார்கள்.
'உணவென்பது நிலத்தொடு நீரே' என்கிறது தமிழ். நீரும் நிலமும் இல்லாமல் நமக்கு உணவு இல்லை. மணிமேகலை சொல்வது.. மண் திணி ஞாலத்து உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. அப்படி நமக்கு உயிராக இருக்கும் உணவை ரசித்து ருசித்துப் புசியுங்கள். ஒவ்வோர் உணவும் உண்பவருக்குக் கொடுக்கும் இன்பத்தை இனங்காணுங்கள். உணவைக் கொடுத்தவரைப் பாராட்டுங்கள். நாள் இனிமையாகும். வாழ்வு செழுமையாகும். மனம் நலமாகும்.
இதோ.. உங்களுக்கு விருந்தாக 'சுவீட் காரம் காப்பி'.
தூத்துக்குடியில் பிறந்து சென்னையின் எண்ணிக்கையில் கலந்துவிட்ட ஜிரா... எழுதப் படித்துக் கொண்டிருப்பவன். வலைப்பூ காலம் தொடங்கி, எழுத்தோடும் தமிழ்க் கூட்டத்தோடும் தொடர்ந்து பயணிப்பவன். சங்கத்தமிழ், சிலப்பதிகாரம், திருப்புகழென்று செவ்விலக்கியம் மட்டுமல்ல... மக்கள் இலக்கியத்திலும் எளிய எழுத்துகளிலும் மேய்ந்து கொண்டிருப்பவன். முரண்களின் அரண். இவன் எழுதுவதெல்லாம் இவனுக்கு இவனே சொல்லும் கதைகள்தாம். இலக்கியத்துக்கு இலக்கணமில்லை என்று நம்புகிறவன். திரைப்பாடல்களை வைத்து 'நாலு வரி நோட்டு', சிறுகதைத் தொகுப்பாக 'என் கொங்கை நின் அன்பர்', புதினமாக 'காமரூபவல்லி' பதிப்பித்த பிறகு கொண்டு வந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு 'சுவீட் காரம் காப்பி'.
Be the first to rate this book.