‘சோவியத் பால்’ இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி பெர்லின் சுவர் இடிக்கப்படும்போது முடியும் நாவல். பால்டிக் நாடுகளில் ஒன்றான லாட்வியா சோவியத் யூனியனின்கீழ் இருந்த வருடங்களில் அந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட அக, புற நெருக்கடிகளை இரண்டு பிரதான கதாபாத்திரங்களின் வழியே விவரிக்கிறது இந்த நாவல். தாயும், மகளுமாய் இரண்டு கதாபாத்திரங்கள் தங்களது பார்வைகளினூடாக மாறி மாறி நாவலை முன்னெடுத்துச் செல்லும் வண்ணம் கதையோட்டத்தை அமைத்திருக்கும் நாவலின் ஆசிரியர் நோரா இக்ஸ்டெனா தீவிரமானதொரு அரசியல் பின்னலை நாவல் முழுக்கப் படரவிட்டிருக்கிறார். குறைந்த பக்கங்களில் தீவிரமானதொரு கதையை அதன் முழுமை குன்றாமல் நோரா இக்ஸ்டெனாவால் சொல்ல முடிந்திருக்கிறது. கவித்துவமான மொழியும், விவரணச் சிக்கனமும் அமைந்த இந்த நாவல் தீவிர அரசியலைப் பேசும் அதேவேளை தாய்-மகள் உறவின் நுட்பமான புள்ளிகளையும் தொட்டுச் செல்கிறது. எந்த வடிவிலிருந்தாலும் அடிமைத்தனத்தை மறுக்கும் சுதந்திரத் தேட்டம் மானுட வாழ்வின் ஆதார விழுமியங்களில் ஒன்று என்பதைச் சொல்லியிருக்கும் இலக்கியங்களது வரிசையில் ஒளியுடன் நிற்கத் தகுந்த படைப்பு ‘சோவியத் பால்’.
Be the first to rate this book.