பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.
பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன். அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்களுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததைப் போலிருந்தது. ஈரம் என் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவிற்று. ஈரம் என்பது அன்பு, கருணை, நம்பிக்கை, தியாகம், உதவி, பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்துக்கும் பொருந்தும். செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்பட்டும் விதவிதமானவற்றை ருசித்துப் பார்க்கும் வேட்கையினாலும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றைத் தேர்வு செய்து பசியாறும் சிட்டுக்குருவியாகச் செயல்பட்டிருக்கிறேன்.
Be the first to rate this book.