வாழ்க்கையை நேரடியாக நோக்கி எந்தவிதச் சப்பைக்கட்டுகளோ உபதேசங்களோ இல்லாமல் கதைகள் எழுதுபவர்களில் ஒருவர். மாறிவரும் காலம், மாறாத சிலவற்றுடன் தொடர்ந்து செய்ய நேரிடும் மௌன யுத்தங்களின் சாயல்கள் அவர் கதைகளில் உண்டு. இந்த யுத்தத்தில் உள்ள இழுபறி உறவுகள், இறுக்கங்கள், கோபங்கள், சோகங்கள், ஏய்ப்புகள், அடக்குமுறைகள், மௌனங்கள், சலனங்கள் எல்லாம் அவர் எழுதிய கதைகளில் பல வடிவங்களில் உருப்பெற்றன. தன் கதைகளில் எதையும் விளக்க முற்படுவதில்லை சரோஜா ராமமூர்த்தி. எந்த நிகழ்வையும் கதாபாத்திரத்தையும் அலசி ஆராய்ந்து இதனால் இது என்று நியாயப்படுத்துவதில்லை. தீர்ப்புக் கூறும் பொறுப்பையும் ஏற்பதில்லை. இதைத்தான் மிகையில்லாமல் “குறைபடவே சொல்லல்” என்று க.நா.சு. பாராட்டியிருக்கிறார். அவர் பாணியில், அவர் நோக்கில் அவர் எழுதிய கதைகளை ஒரு தொகுப்பாக இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவந்து மீண்டும் அவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைக்க இதுவும் ஒரு காரணம். மீண்டும் சரோஜா ராமமூர்த்தியைப் படிக்கும் உந்துதலை இத்தொகுப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சரோஜா ராமமூர்த்தி (ஜூலை 27, 1921 ஆகஸ்ட் 8, 1991) நவீனத்தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி. அறுநூறுக்கும் அதிகமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். 1943ம் ஆண்டு எழுத்தாளர் து.ராமமூர்த்தியை மணந்துகொண்டார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 'பாரதி' என்ற பெயரில் கையெழுத்து இதழ் நடத்தினார். சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, மங்கை, சக்தி, கலைமகள், நவசக்தி, காதல், அமுதசுரபி, தினமணிகதிர், வீரகேசரி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். இவரது நூல்களை தமிழ்நாடு அரசு 2010 ம் ஆண்டு - நாட்டுடைமையாக்கியது.
Be the first to rate this book.