சா. கந்தசாமியின் ஒட்டுமொத்த படைப்புகளுக்கும் ஒரு தனித்துவமிக்க குரல் இருக்கிறது. அது கண்ணியமிக்க காவிரிக்கரைக் குரல். காமத்தையும் கள்ளக்காதலையும் பேசுமிடங்களில் கூட சா. கந்தசாமியின் படைப்புகளில் விரசமிருக்காது. ஒரு தணிந்த, நிதான, கட்டுக்கடங்கிய, கறாரான மொழிநடையைக் கையாளும் சா. கந்தசாமி கதை சொல்கிறபோது நவீன உளவியல் இலக்கியப் போக்குகளைப் பின்பற்றுகிறார். அவரது கால்கள் சொந்த மண்ணில் நிலைபெற்றிருந்தாலும் அவரது கண்களுக்கு உலகம் தழுவிய பார்வை இருக்கிறது. சா. கந்தசாமியின் கதைகள் ஒரு நேர்கோட்டில் இயங்குவதே இல்லை. கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதையே தனது இலக்கியச் செயல்பாடாகக் கொண்டு இயங்கிய சா.கந்தசாமியின் படைப்புகளை 'கதைக்குள் கதை' கொண்ட இலக்கிய வடிவமாக உணர முடிகிறது.
சந்தியா நடராஜன் என்றழைக்கப்படும் முத்தையா நடராஜன் 13.01.1960இல் காவிரிக்கரை நகரமாகிய மாயவரத்தில் பிறந்தவர். சென்னை சுங்கத்துறையிலும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையிலும் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் ஒரு கவிதைத் தொகுப்பும் 3 கட்டுரைத் தொகுப்புகளும், 10 மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார். இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள 'கலைஞர் மு.கருணாநிதி வரலாறு' என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.