அழகு ஓர் ஆபத்தான ஆயுதம்! ஆனால், பெண்களுக்குச் சரியான சமத்துவமும். சுதந்திரமும், பண்பும், வசதியும் கிடைக்கும்வரை, அவர்கள் இந்த ஒரே ஆயுதத்தை உபயோகித்தே தீரவேண்டியவராகிறார்கள். அந்த நிர்ப்பந்தம் நீங்கிய பிறகுதான், அழகு ஆயுதமாகவோ ஆபத்தாகவோ இராமல் இன்பக்காட்சியாக, இருதய கீதமாக இருக்கமுடியும். போர்வீரன் தனது வாளின் கூர்மையாலும் அதைவிடக் கூர்மையான தனது திறமையாலும் எங்ஙனம் பலருடைய இருதயங்களைக் குத்திக்கொன்று. பின்னர் தனது கீர்த்தியை நிலைநாட்டிய பிறகு எங்ஙனம் உலகம் அவனைப் போற்றியும் புகழ்ந்தும், அவன் ஆணைக்கு அடங்கியும், அன்புக்கு ஏங்கியும் கிடக்கிறதோ, அதுபோல், ரோம் சாம்ராஜ்யத்து ராணிகள் தங்கள் அழகை ஆயுதமாகக்கொண்டு வீரரை, ராஜதந்திரிகளை, இளவரசரை, மன்னரைத் தாக்கி, பலரை வீழ்த்தி, ஒருவரைத்தழுவி கீர்த்தியும் சித்தாப்பும் தம்மை வந்து தழுவும்படிச்செய்து சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்தனர்.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.