புரட்சியில் பகுத்தறிவு என்ற இவரது நூல் தமிழ்நாட்டு வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று இரண்டு பதிப்புகளைக் கண்டது. அந்நூலின் தொடர்ச்சியாக, மாமேதை லெனின் அவர்கள் மார்க்சியத்தின் மூன்று கூறுகளாக வரையறுத்த தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்பதன் இரண்டாவது கூறான பொருளாதாரம் குறித்து இந்நூலை எழுதியுள்ளார். உலகப் பொருளாதாரம் குறித்த முதல் தொகுதி. கூடவே வெளியாகும் இந்தியாவையும் அதற்குள் தமிழ்நாட்டையும் பற்றிய இந்த இரண்டாவது தொகுதி என இரண்டு பகுதி நூல்களாக வெளிவருகிறது.
தோழர் ப.கு.ராஜனின் இந்த நூல், தமிழில் வரலாற்றுப் பகுப்பாய்வுகளுக்கு ஒரு புதிய தரத்தை வகுக்கிறது. சிக்கலான பொருளாதாரக் கோட்பாடுகளை எளிய நடையில் விளக்குவது. ஆதாரங்களுடன் கூடிய திறனாய்வு, சாதி-வர்க்கத் தாக்கங்களின் தடயங்களைத் தேடும் புதுமையான முயற்சி ஆகியவை இதை ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாக ஆக்குகின்றன. இது வரலாற்றாசிரியர்கள், பொருளாதார ஆய்வாளர்கள், சமூக நீதி தொடர்பான ஆர்வலர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய ஆக்கமாகும்.
க.சந்தானம் – மேலாண்மை இயக்குநர். NCBH.
எல்லாம் ஏகாதிபத்திய சதி என்றும் எதிர்ப் புரட்சிக்காரர்களின் துஷ்பிரசாரம் என்றும் வசைபாடி காற்றில் சிலம்பம் சுழற்றிக் கொண்டிருக்க முடியாது. “எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்” என்றால் மார்க்சீய அறிஞர்களுக்கு என்னஆயிற்று என்ற எதிர்க் கேள்வி நமக்குள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. கனத்த மௌனமும் கேட்பவரின் நம்பகத்தன்மை குறித்த ஐயப் பார்வையும் மட்டுமே தக்க பதிலாக மாட்டா. ப.கு. ராஜனும் இத்தகைய சூழல்களை எதிர்கொண்டவர் தாம் என்றாலும், அவரால் வாளாவிருக்க முடியவில்லை. எண்ணங்களை வரலாற்று/ புள்ளியியல் தரவுகளோடு எழுத்தாக்கி நமக்குத் தந்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் சில விமர்சனங்களை மறுப்பவர்கள் அவரைவிட அதிகம் படித்தாக வேண்டும் என்றும் அவரைவிட அதிகத் தரவுகளைத் தந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தோடு தனது கருத்துக்களை அவர் எழுத்தாக்கியிருப்பது தான் இந்த நூலின் தனிச் சிறப்பு.
சண்முக. ஞானசம்பந்தன். நூலுக்கான முன்னுரையில்.
Be the first to rate this book.