புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகக் காப்பாட்சியராகப் பணியாற்றிய ஜெ.ராஜாமுகமது எழுதிய ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற இந்நூல், அம்மாவட்ட மக்களுக்கும், தமிழகத்தின் ஆய்வாளர்களுக்கும் கிடைத்த பெரும் கொடை என்றே சொல்ல வேண்டும்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி இவர், புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்திருப்பது இந்நூலுக்கு சிறப்பு சேர்த்துள்ளது. இம்மாவட்டம் சங்க காலத்தில் பெற்றிருந்த சிறப்பு விவரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் கி.மு.200 முதல் கி.பி.200 வரை வழக்கிலிருந்ததாகக் கருதப்படும் பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்திருப்பதன் மூலம் இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் செழுமையைப் பற்றி நூலாசிரியர் பேசுகிறார்.
புதுக்கோட்டைப் பகுதி வணிகர்கள், உள்நாட்டின் பிற பகுதி வணிகர்களோடு மட்டுமன்றி, கடல் கடந்த வாணிபத் தொடர்பையும் கொண்டிருந்தார்கள். இதனை இங்கு கிடைக்கப் பெற்ற கி.மு.29க்கும் கி.பி.79க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ரோம நாட்டு நாணயக் குவியல்கள் வாயிலாகத் தெரிய வருவதாக அவர் நிறுவுகிறார். இதன் மூலம் புதுக்கோட்டை பகுதியின் செல்வச் செழிப்பையும், நாகரிகத்தின் வளர்ச்சியையும் அறிய முடிகிறது.
Be the first to rate this book.