எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்வது எப்படி அன்பின் பாற்பட்டதோ, என்ன சொன்னாலும் கேட்காமல் இருப்பதும் அன்பின் பாற்பட்டது தானே. தங்கராஜ் 'அன்பில் மலர்ந்த நல் ரோஜா'. வேறு வார்த்தையில் சொன்னால் பிரியத்தால் ஆனவன். இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குபவன். யாரிடமும் கை குலுக்குவது. எவர் எனினும் அணைத்துக் கொள்வது, எந்தக் கணம் எனினும் அந்தக் கணத்து வாழ்வைக் கொண்டாடுவது, நெருக்கடிகளில் நிபந்தனையற்றுத் துணையிருப்பது தானே அல்லது துணை இருக்கத்தானே இந்தக் கலையும் இலக்கியமும் எல்லாம். வெயில் காலத்தைப் பற்றி அவன் திருப்பிக் காட்டும் சித்திரங்கள் ஒவ்வொன்றும் நிழல் விழாதவை. அறுவடைக் காலத்து வயல்களின் மீது விழும் வெயிலைப் பற்றிய வரிகள் ஒரு ஓவியனுடையவை. அதே கையால் தான் அம்மா பழந்துணியால் விளிம்பு தைத்து வைத்திருக்கும் பனையோலை விசிறிகளைப் பற்றியும் எழுதுவான். என்னைப் பொருத்தவரை வெயிலையும் பனையோலையையும் பற்றி எழுதுகிறவன் மகான். இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை பேருடனும் ஒரு 'சிங்க்' இருக்கிறது. ஒரு வைப்ரேஷன்' இருக்கிறது. உன்னிடம் வாழ்வு, எழுத்து எல்லாம் இருக்கிறது தங்கம்.
-கல்யாணி.சி.
சண்முகசுந்தரம் எழுத்துக்களை எந்த வகைமையில் சேர்ப்பது? இவற்றில் உண்மை இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. அனுபவம் உருவாக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இருக்கின்றன. அவை வாசிப்பவரிடம் கொண்டுச் சேர்க்கும் சமூகப் பண்பாடுசார் விழுமியங்களும் இருக்கின்றன. இத்தகு படைப்புகள் உலகமெங்கும் எழுதப்பட்டு வருகின்றன. இதை creative nonfiction, narrative nonfiction, verfabula என்று அழைக்கிறார்கள். லீ குட்கைண்ட் எனும் அமெரிக்க எழுத்தாளர் நம் சண்முகசுந்தரம்போல creative nonfiction வகைப் படைப்புகளை எழுதியவர். ஒரு நிருபரைப் போலத் தகவல்களால் தொடர்புகொள்வது, அதேவேளை புனைகதை போல படிக்கும் சுவாரஸ்யத்தை உருவாக்கும் வகையில் வடிவமைப்பதைதான் literary nonfiction' என்கிறார் லீ குட்கைண்ட் சண்முகசுந்தரம் காட்டும் மனிதர்கள் இயல்பில் அவரோடு பழகியவர்கள். பஸ்ஸில் அவரோடு பயணிக்கும் ரோஸி டீச்சர் ரோஜாவின் ஒற்றை இதழை அவருக்கு உதிர்த்துத் தருகிறார். அதை rose is a rose is a rose என இலக்கியமாக இவரால் மாற்ற முடிகிறது. சம்பவங்களின் உள்ளார்ந்த தன்மையை தேடுவதன் மூலம், தனது அனுபவங்களைப் புனைவாக மாற்ற சண்முகசுந்தரத்திற்குத் தெரிந்திருக்கிறது.
-கரிகாலன்
Be the first to rate this book.