"வாழ்க்கையை ஒரு முதிர்ந்த ஞானியைப் போல நோக்குகின்ற தன்மை மதுஷனின் கவிதைகள் சிலவற்றில் காணக்கிடைக்கின்றது. இந்த உள்ளுணர்வின் தடத்தில் இறங்கிச் செல்வது பல கவிஞர்களிடமும் காணக்கிடைக்கின்ற ஒன்று தான். ஆனால் பலரது கவிதைகளில் இது சுயபுலம்பலாக எஞ்சி நிற்பதை காணமுடிகின்றது. ஆனால் மதுஷன் பிறரது அனுபவங்களுக்குள் தன்னை இலாவகமாக நுழைத்துவிடுகின்றார். இந்த நுட்பமான மொழிதல் மிக முக்கியமானதென்றே படுகின்றது. கவிதை என்பது வெறும் சொற்களால் அமைக்கப்படுகின்ற அடுக்கல்ல. அது வாழ்வின் நீட்சியில் ஏதோ ஒரு மையத்தில் நின்று கொண்டு வாசகரை வாழ்வை நோக்கவைக்கின்றது. இந்தஅர்த்தமுள்ள பார்வை வாசகருக்கு அவசியமானது. எதையும் எளிமையாக புரிந்து கொள்ள பேண்டும் என்பது பொதுப்புத்தி சார்ந்தது. இந்த பொதுப்புத்திக்கு உட்பட்டவையல்ல மதுஷனின் கவிதைகள். வாசகரின் செயலாற்றுகையை அவை வேண்டி நிற்கின்றன. அர்த்தமும் செறிவடர்த்தியும் மிக்க மதுஷனின் கவிதைகள் கவிதைச் செல்நெறியில் புதிய போக்கின் வழியில் செல்ல முனைகின்றன. அவரது கவிதைகள் பரந்த வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். நவீன கவிதை பற்றிய உரையாடல் வெளிகளை திறந்துவிட வேண்டும்"
-சித்தாந்தன்
Be the first to rate this book.