‘படித்துதான் ஆகணுமா?’ என்பது வாசகரை நோக்கிய கேள்வியல்ல. இது இன்றைய உயர்கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னுள்ள கேள்வி. நவீனக் கல்வி முழுமையாகத் தனியார்மயமான பின்னர் அதன் இலக்கு பணம் சம்பாதிப்பதாகச் சுருங்கிவிடுகிறது. கல்வியும் அதனாலே குழந்தை வளர்ப்பும் முன்னெப்போதும் இல்லாதபடிக்கு செலவு பிடித்ததாகிவிட்டது. கல்விக் கடன் பெரிய பூதமாக எழுந்து நிற்க, வேலையின்மை மென்னியை நெரிக்க, கல்வியின் முந்தைய நோக்கங்களான சிந்திக்கும் திறனை, சமூகச் சிந்தனையை வளர்ப்பது, விழுமியங்களைப் பின்பற்றுவது இன்று சாத்தியமா? அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட தேசங்களில் உள்ளூர் மாணவர்கள் இன்று உயர்கல்வியைப் பரவலாக நாடுவதில்லை.
அமெரிக்காவில் 27%, இங்கிலாந்தில் 39% இந்திய மாணவர்களே நிறைந்துள்ளார்கள் என்பது 2025இன் புள்ளிவிவரம். உள்ளூர் மாணவர்கள் உயர்கல்வியைக் கைவிடும் நிலைமை நமக்கும் வரும். உயர்கல்வி மாணவர்கள் பணியாற்றிக் கொண்டே கற்பதை தற்போதைய ஒன்றிய அரசு கட்டாயமாக்குகிறது. எதிர்காலத்தில் இதைப் பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு வருவார்கள் என்பதையே புதிய கல்விக்கொள்கை காட்டுகிறது. அப்போது இக்கேள்வி மீண்டும் எழும்: ஏன் படிக்க வேண்டும்?
Be the first to rate this book.