அறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிராமண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் கொண்டார். சனாதன மரபை உடைத்தெறிந்துவிட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். மொட்டையிடுவதைத் தவிர்த்து முடிவளர்த்து கிராப் வைத்துக்கொண்டார். வேட்டியும் ஜிப்பாவும் மேல்துண்டும் அணிந்து தனக்கொரு தனி அடையாளத்தை நிறுவிக் கொண்டார். சைக்கிளில் பயணித்தார். எதிரிகளைச் சமாளிக்க தற்காப்புக் கலைகளைக் கற்றார். இடதுசாரி இயக்கத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தினார். 1953ஆம் ஆண்டு எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகி இறந்துபோன அவர் வரலாற்று நாயகியானார். மணலூர் மணியம்மாவைப் பற்றிக் கள ஆய்வு செய்து இந்த வாழ்க்கை வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். இடதுசாரி இயக்க வரலாற்றில் கவனம் பெறாமல்போன அந்த வீரப் பெண்மணியைப் பற்றிய ஒரே பதிவு என்ற வகையில் இந்தப் படைப்பு முக்கியமானது.
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம் கிருஷ்ணன் உலகம் போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்!
Be the first to rate this book.