ஒரு நிலத்தில் வாழும் கவிஞனின் நிகழ்வுலகம் நண்பனுடன் தேநீர்க் கடையில் இல்லறத்தில் அக்கம் பக்கத்தில் பயணங்கள் மற்றும் வீடு திரும்புதல் என மானுடத்தன்மை கொண்டிருந்தாலும் அவன் தன் நனவிலியில் இயற்கையை அதன் பேராற்றலை அறிந்தவனாகத் தன் கனவு உலகில் அல்லது தானறியாத நிழல் உலகில் ஒரு குழைந்தமையை போலப் பாதுகாப்பு உணர்வுடன் மேலும் பால் வேண்டும் தாகத்துடன்தான் அகத்தில் இருக்கிறான். இதற்கிடையில் அவன் உலகில் கடவுள் காதல் மற்றும் பசி யாவும் மறை பொருளாகச் செயல்படுகின்றன. குளிர் காய்பவனைப் போல எதையும் நெருங்காமலும் அதை விட்டு அகலாமலும் இருக்கும் கவிதைகளை இளங்கோவன் இந்த தொகுப்பில் நிகழ்தகவு என்ற பெயரில் முழுத் தொகுப்பாகக் கொடுத்துள்ளார்.
'கடந்துபோன முப்பது ஆண்டுகளின் நினைவுகளாக ஒரு வெள்ளைநிறக் காகிதத்தை மட்டுமே இந்த மேசையில் வைத்துவிட்டுப்போகிறேன்'.
'உதிரப்போகும் நாட்களில் எஞ்சியிருக்கும் தாவரங்களின் விதைகளை நீயாவது சேமித்துக்கொள்'.
மனிதப் பிறவியோடு மாசற்று தன்னை இனங்காணும் இக்கவிதைகள் கிடைத்ததற்கும் கிடைப்பதற்கும் இடையே நிகழ்தகவு கொண்டு ஆர்ப்பாட்டம் ஏதுமற்ற நிலையில் தன்னிலையை மட்டுமே தியானிக்கின்றன. இன்றைய நவீனக் கவிதைகளில் இத்தன்மை ஒரு பேசு பொருளாகக் காணப்படுகிறது.
-யவனிகா ஸ்ரீராம்
Be the first to rate this book.