கவிதையைப் பார்க்கும் முறையையே மாற்றுகிறார், சுதர்சன். எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லாமல் வாசிக்கிறவர்கள் கண்டுபிடிப்பாளர்களாய் மாறி, கண்டுபிடிக்க வேண்டுகோள் விடுக்கின்றன, இவர் கவிதைகள். இருபத்தோராம் நூற்றாண்டின் ஒரு பெரிய இரத்தக் களரியான போரை நினைவின் அசைவுகளாய்த் தன்னுள்ளே வைத்திருக்கின்றன இவரது கவிதைகள். இவரின் மொழியும் கவிமனமும் வரலாற்றை வாக்கியக் கட்டமைப்பில் கொண்டுவரும் முறைமையும் இக்காலக் கவிதைக்குப் புதிதாய் உள்ளன. கவித்துவ உத்வேகம் என்பது ஒருவகையில் மொழியின் அழிவு. இதுவே மொழியின் ஆக்கமும் ஆகும். இவர் கவிதைகளை வாசிக்க வேண்டிய முறையில் வாசித்தால் இது புரியும். எதிர்ப்பொருள்கொண்டு மோதும்போது கிடைக்கும் புதிய அணுப்பிளப்பு, அர்த்த வீச்சுகள் வாசகனைச் சிறைப்பிடிக்கின்றன. இவரது கவிதைகளில் மூதாதையர்களின் குரல் கேட்கிறது. ஒரு பழங்காலக் கனவு பிறக்கிறது. யுத்தத்தில் செத்தவர்கள் வரிசை வரிசையாய் வருகிறார்கள். சுதர்சனின் கவிதைகள் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னரான ஈழத்தில் என்ன நடக்கிறது எனக் கேட்கும் எல்லோருக்குமான பதிலை வைத்திருக்கின்றன.
-தமிழவன்
Be the first to rate this book.