ஒரு தலைவரின் நாவன்மை என்பது வெறுமனே தகவலைப் பரிமாறும் கருவி மட்டுமல்ல; அது மக்களைப் பெருமளவில் அணிதிரட்டி அரசியல் திரட்சியாக மாற்றக் கூடியதும், அவர்களின் ஆன்மாக்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும். மொழி என்பது நடத்தைகளை மாற்றியமைக்கப் பயன்படும் ஓர் அதிகாரக் கருவி.
பொது மேடைகளில் மால்கம் X ஆற்றிய உரைகளே, சமூக மாற்றத்திற்கான அவருடைய நேரடிச் செயல்பாடுகளாகும்; “அவருடைய வார்த்தைகளே அவருடைய செயல்களாக” அமைந்தன எனலாம். மால்கம் X பெரிதும் அறியப்படுவது அவருடைய ஆற்றல்மிக்க உரைகளால்தான்.
கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த 100 அமெரிக்க உரைகளின் பட்டியலில், 7-வது இடத்தைப் பிடித்துள்ளார் மால்கம் X. இந்தப் படியலில் முதலிடம் பிடித்துள்ள மார்ட்டின் லூதர் கிங் கூட, மால்கமின் பேச்சைக் கேட்டு இப்படி வியந்து கூறியுள்ளார்:
“நான் இப்போதுதான் மால்கம் எக்ஸை தொலைக்காட்சியில் பார்த்தேன், என்னால் அதை மறுக்க முடியாது. நமக்கு என்னவெல்லாம் இழைக்கப்பட்டது என்பதைப் பற்றி அவர் பேசத் தொடங்கும்போது, எனக்கும் வெறுப்புணர்வும், அவரோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உணர்வும் ஏற்படுவதை உணர்கிறேன்.”
அமெரிக்காவின் பல பல்கலைக் கழகங்களில் ஆஃப்ரிக்க ஆய்வுத் துறைகளின் கீழ், மால்கம் X-ன் சிந்தனைகளின் தாக்கம் குறித்த ஆய்வுகள் இன்றும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, அமெரிக்க அரசியல் வரலாற்றில் அவருடைய தவிர்க்க முடியாத இடத்தை அறிந்து கொள்ள சிறந்த சான்றாகும்.
Be the first to rate this book.