நமது இயக்கம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. எவர்மீதும் நமக்குப் பகை கிடையாது. பிராமணரல்லாதார் மீதுள்ள அன்பினாலேயே அவர்களது முன்னேற்றம் நாடி நமது இயக்கம் தோன்றிற்று. நம் இயக்கத்தின் தேவையையும் அது பிராமணரல்லாதாருக்குச் செய்துவரும் நன்மைகளையும் மாஜி முதல் மந்திரி திரு சி. ராஜகோபாலாச்சாரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். டாக்டர் நாயர் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும்பொருட்டு சேலத்தில் கூடிய பொதுக்கூட்டத்தில் தலைவர் வேண்டுகோளின்படி திரு. ராஜகோபாலாச்சாரியார் பேசியபோது குறிப்பிட்டதாவது:- "பிராமணரல்லாதார் இயக்க நோக்கங்கள் பலவற்றில் எனக்கு அனுதாபமுண்டு. சமூக அமைப்பில் பல அநீதிகள் இருந்தன. அவைகளை ஒழிக்க அரசியல் தலைவர்கள் முயலவில்லை; குறைப்பட்டோரை அவர்கள் அலட்சியம் செய்தனர். அரசியல் மூலமன்றி சமூகக் குறைபாடுகளை ஒழிக்க முடியாதெனக் கண்டு டாக்டர் நாயர் பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்தார். ஆகவே, இவ்வியக்கத்தினால் அநேக நன்மைகள் உண்டாயிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இவ்வியக்கத்தினால் முன்னம் விஷயங்களை ஆராய்ந்து பார்க்காதவர்கள் இப்பொழுது பார்க்கிறார்கள்: முன் விளங்காமலிருந்த பல விஷயங்கள் இப்பொழுது தெளிவாக விளங்குகின்றன. எவரையும் வெறுக்குமாறு பிராமணரல்லாதார் கூறவில்லையென திரு. ஜீவரத்தினம் பிள்ளை தெளிவாக விளக்கிக்கூறியதுபற்றி சந்தோஷப்படுகிறேன் நம்மவர்களுக்குள் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க இந்த சந்தர்ப்பம் பெரிதும் உதவி புரியுமென்று நம்புகிறேன்.”
-புத்தகத்திலிருந்து
பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளை நீதிக்கட்சியின் வரலாற்றை எழுதியவர். 1916 இல் தமிழன் என்கிற ஒரு "மாதாந்தச் செந்தமிழ்ப் பத்திரிகை "யைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். தந்தை பெரியாரின் விடுதலை நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
Be the first to rate this book.