நாவல் கலை தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தர முயன்றவர்கள் என்று இந்த ஐந்து ஆசிரியர்களையும் தமிழர்கள் போற்ற வேண்டும். இலக்கியத்திலே எந்த முயற்சிக்குமே மரபு என்பதுதான் ஆணி வேர், மரபு என்று ஒன்று ஏற்படாத காலத்தில் எழுதுபவர்கள் பலவித கஷ்டங்களுக்குள்ளாகிறார்கள். அந்தக் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கு முன்னோடிகளுக்குச் சாமர்த்தியம் மிகவும் வேண்டும். இன்று தமிழ்க் கலையுலகிலே நாவல் என்கிற விருக்ஷம் பரந்து விரிந்து ஓங்கி வளருகிறது என்றால் அதற்கு வழி செய்து தந்தவர்கள் வேதநாயகம் பிள்ளையும். ராஜமையரும், மாதவையாவும், நடேச சாஸ்திரியும், பொன்னுசாமிப் பிள்ளையும்தான். அவர்களுடைய முதல் நாவல் (சில சமயம் ஒரே நாவல்) பற்றி அறிந்து கொள்ள என் சிறு நூல் தமிழர்களுக்குப் பயன்படும் என்று எண்ணுகிறேன். ஒரு நூறு பேர்வழிகளாவது என் சிறு நூலால் தூண்டப்பட்டு அந்த முதல் நாவல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பார்களானால் அதுவே என் முயற்சிக்குப் பயன் என்று திருப்தியடைந்து விடுவேன்.
-க.நா.சு
Be the first to rate this book.