உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை;
திளைப்போன் ஒருவன் தீயன செய்தே:
என்னுடற் குருதி இறைத்து விளைந்த
பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்;
அருமைத் தேனீ! அரிதின் ஓடிச்
சேர்த்தனை தேனை; சிதைத்தே
ஒருவன் உண்டான் அந்தோ!
உன்போல் நானும் உள்ளேன்;
இதனை உணர்வார் யாரோ?
ஒருநாள் இங்கே திருநாள் என்றார்
ஆண்டவ னுடனே ஐயரும் இருந்தார்
அலுக்கத் தூக்கி அயர்ந்தேன்; பின்னர்
சோறு கேட்டேன் "சோம்பல் பயலே!
திமிரா உனக்கு? திருட்டுத் தடியா!
பொறுடா" என்றார் பூசுரர்; என்றன்
தோளை முறித்த தோடுடைச் செவியன்
அருகிற் சென்றே அப்பா! என்றேன் "விதிவிதி"
என்றான் குறைமதி யோனே.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.