என் நிலம் புது வண்ணங் கொள்ளும்
பல வண்ணங்களாலான
என் கடந்து நிகழும் காலங்களை
மலர்ந்து மணக்கும் கனவுகளைக்
கருகித் தீய்க்கிறது இந்தக் கோடைக்காற்று
திசைகளற்ற தீவிர சுழற்றலில்
வண்ணங்கள் மரித்துப் போகின்றன
கறுத்த நிறத்தில் மரணித்த கனவுகள்
என் நிறமற்ற கண்ணீர்த் துளியில் குழைகிறது
அந்தக் கருஞ்சாந்தைத்
திலகமாய்த் தீட்டிக் கொள்கிறேன்
வெறுமைக்குள் உழன்ற விழிகளைத் திறக்கிறேன்
இரு இளஞ்சூரியன்களாய் ஒளிர்ந்து மிளிர்கின்றன
என்நிலத்தின் ஒவ்வொன்றிலும்
இப்போது புதிதாய் வண்ணம்
துளிர்க்கத் துவங்குகிறது இனி
என் நிலம் புது வண்ணங்கொள்ளும்.
Be the first to rate this book.