சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என நுரைத்துப் பொங்கிய இன்பச் சுவையை நவீன கவிதைகளின் காலத்துக்கும் நீட்டிருத்திருக்கிறார் முரளி அரூபன். நகில்நலம் பாடும் 450 நேரிசை வெண்பாக்களின் தொகையாய் ‘மதன விலாசம்’ மலர்ந்துள்ளது.
தலைவன் நெஞ்சொடு கிளந்தும், எந்நாளோ என்று எக்காலம் பாடியும் போதாமல் புள்ளினங்களையும் தூது விடுகிறான். தலைவி, தோழன்(?), தோழி, செவிலி, கவிக் கூற்றுகளாகவும் இடஞ்சுட்டி பொருள்விளக்கம் தொடர்கிறது. உவமை உருவகங்களோடு ஒருபொருட்பன்மொழிக்குத் தோள்களும் துணைக்கு வருகின்றன.
ஆழ்மனவோட்டங்களை அச்சு அசலாக பிரதியெடுக்க, இன்றைய கட்டற்ற கவிதைகள் முயன்றுகொண்டிருக்க, இன்னமும் அங்க வர்ணனைகளிலேயே ஆட்பட்டு நிற்கலாமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
‘அமரர் பதியினும் உயர்ந்தது பஞ்சபாண வஞ்சகன் வீதி’யென நீளும் முன்னுரை அதற்குப் பதிலாக அமைந்திருக்கிறது; முறைபிறழ்ந்து நிலைகுலைந்து நிற்கும் இன்றைய சூழலில், அகத்திணை பாடுவோம், அதனைப் போற்றுவோம் என்று, காதற்கடவுளே சாயாத கொம்புகளை வர்ணித்து வழிகாட்டிப் போயிருக்கிறான்.
அடியவர்கள் தப்பிவிட முடியுமா என்ன? முரளி அரூபன் வெண்டளைகளில் விளையாடியிருக்கிறார் என்றால் கோடுகளாலும் வளைவுகளாலும் அதை மொழிபெயர்த்துள்ளார் ஓவியர் ஸ்யாம்.
Be the first to rate this book.