மனதின் பக்கங்களைத் திறக்கும் பேராற்றால் புனைவிலக்கியங்களுக்கு உண்டு என்று நம்புகிறவன் நான். முப்பது வருடங்களைத் தொடப்போகும் துயரச்சாம்பல் படிந்த அந்தக் காட்சிகளைத் திரும்பத் திரும்ப திறந்துகொண்டேயிருந்தது சம்சுதீன் ஹீரா எழுதியிருக்கும் ‘மர்யம்’ எனும் இந்த நாவல். மர்யத்தின் அசல் பெயரை எனக்குத் தெரியும். கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகான நாட்களில் ஒட்டப்பட்ட கருப்பு போஸ்டர்களைக் கண்ணுற்ற எல்லோருக்கும் மர்யத்தின் அசல் பெயர் நிச்சயமாகத் தெரிந்தேயிருக்கும். எளிதில் மறந்து போகும் பெயர்கள் அல்ல அவையிரண்டும். புர்கா அணிந்த அந்தப் புகைப்படமும் அது ஏற்படுத்திய பெருந்துயரத்தையும் சம்பந்தப்பட்டவர்களால் எப்படிக் கடந்து வெளியேற முடியும். இனி அந்தப் பெயர் நாவலை வாசிக்கும் எவருக்குள்ளும் மர்யம் என்றே இருக்கட்டும். மர்யத்தின் கதை வழியாக நம் காலத்தில் நிகழ்த்தப்பட்ட அதிகார வன்முறையைப் பேசுகிறது நாவல். அரசு அதிகாரத்தின் வன்முறையை மட்டுமல்ல, இறுகிய மத அமைப்புகளின் உள் அரசியலையும் கட்டுடைக்கிறது எழுத்து. டார்வினின் பரிணாமக்கோட்பாடு விளக்கும் மனிதன் மனிதனான கதையை விஞ்சியதே மர்யம் மர்யமான கதை.
நாவலின் வழிநெடுக வாசகருக்குள் சில கேள்விகளை அதுவும் எதிர்த்திசையில் நகரும் கேள்விகளை முளைவிடச் செய்தபடியே நகர்கிறது கதை. காலத்தை எழுதும் கலைதான் நாவல். சம்சுதீன் ஹீரா எழுதிக் காட்டியிருக்கும் இந்தக் காலப்பகுதிக்குள் இன்னும் சொல்லித் தீர்க்க முடியாத ஒரு நூறு கதைகள் இருக்கவே செய்யும்.
- மணிமாறன்
Be the first to rate this book.