"நிலம் என்பது மனிதர்களின் கதைகளே என்பதையே போர் இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகின்றன. நவீன தமிழ் இலக்கியத்தில் ஈழ எழுத்துகள் தனியிடம் வகிப்பவை, நீண்ட பங்களிப்பை ஆற்றியவை. அந்த வரிசையிலேயே வாசு முருகவேலின் புனைவுகளும் அமைந்துள்ளன. வாசு முருகவேலின் இந்நாவல் ஷோபாவின் மூலமாக நயினா தீவின் கதையைச் சொல்கிறது. தீவின் மனிதர்களுடன் உப்புக் காற்றும், சுடும் மணலும், மீன் வாசமும், கடுதாசிப் பூக்களும் கதையில் உயிர்த்துடிப்புடன் எழுந்துள்ளன. நிலமும் மனிதர்களும் ஞாபகங்களும் பிரிக்க முடியாதவாறு இக்கதை பரப்பில் நிறைந்துள்ளன. அழகுராணிப் போட்டிகளோடும், இளைஞர்களின் காதல் சாகசங்களோடும் இயங்கும் நயினா தீவின் காவல் கோபுரத்தில் இராணுவத் துப்பாக்கியின் கண்காணிப்பு ஏறும்போது அதன் அன்றாடம் உருமாறுகிறது. ஷோபாவின் தேநீரில் அவளறியாமல் கசப்புக் கூட ஆரம்பிப்பது போல. சிக்கனமான உரைநடையில் நுட்பமான சித்திரிப்புகளின் வழியே எழுதப்பட்டிருக்கும் இந் நாவலில், நயினா தீவின் கதை மட்டுமில்லாமல் ஈழ அரசியலின் அடுக்குகளும் பேசப்பட்டுள்ளன. ஆசிரியர், தான் நம்பும் தரப்பினைத் தயக்கமின்றி நேரடியாக முன்வைத்திருக்கிறார். தரப்பே தேர்வு செய்யாத மனிதர்களின் மௌனம் நாவலில் இன்னமும் ஆழமாக வெளிப்பட்டிருக்கிறது."
-எழுத்தாளர் விஷால் ராஜா
Be the first to rate this book.