”நீங்கள் மலர்களுக்குப் பின் எழுதுவதே இல்லையே? எழுதுவதை விட்டு விட்டீர்களா?” என்ற வினா, என்னிடம் எழுப்பப்பெறும்போது எனக்கு இப்போது அது எதிர்பாராக் கேள்வியாக இருப்பதில்லை. ஓர் எழுத்தாளர், மக்களிடையே செல்வாக்கையும் புகழையும் பெறும்படியான பல படைப்புக்களை நாவல் வடிவில் வைத்திருக்கலாம். எனினும், முதலில் அவரை உலகுக்கு உணர்த்தும் பேரலை போல் ஒரு படைப்பு, பரிசு, பத்திரிகை வாயிலான, 'பிரபல்யம்' என்ற சிறப்புக்களைப் பெற்றுத் தரும்போது, அப்படைப்பு வாசகர் மனங்களில் நீங்கா இடம் பெறும் முக்கியத்துவம் ஏற்படுகிறது. ’மலர்கள்’ 1956-ம் ஆண்டில் என்னால் எழுதப்பெற்று, 1958-இல், 'ஆனந்த விகடன்’ நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெறும் சிறப்பையும் பெற்றது. முன்னும் பின்னும் இருந்திராத வகையில் அந்த வெகுஜனப் பத்திரிகையின் தொடர்பு, இந்த நாவலின் வாயிலாக எனக்கு மக்களிடையே செல்வாக்கைப் பெற்றுத்தர வாய்ப்பாக இருந்தது.
- ராஜம் கிருஷ்ணன்
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம் கிருஷ்ணன் உலகம் போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்!
Be the first to rate this book.