கடந்த காலத்தை இறந்த காலம் எனச் சொல்வதில் உடன்பாடில்லை எனக்கு. காலம் ஒருபோதும் மரிப்ப தில்லை. நிகழ்காலம் என்பது கடந்த காலத்தின் நீட்சி, வருங்காலம் என்பது நிகழ்காலத்தின் தொடர்ச்சி. காலம் என்பது அறுபடாத நீள்சரடு. வரலாறு என்பது முன்னோரின் வாழ்வெனும் பட்சத்தில், அதனை மீளப் படைப்பதும் மீண்டும் மீண்டும் படிப்பதும் அவசியமாகிறது. வரலாற்றைப் புதினமாகச் சமைக்கும்போது, மையப்புள்ளியாக ஓர் ஆளுமையை முதன்மைப்படுத்த வேண்டியுள்ளது. அத்தகைய ஆளுமைகள் பலர் தமிழ் மண்ணில் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் ஒரு பேராளுமை, கடையெழு வள்ளல்களில் ஒருவனான குறுநில மன்னன் மலையமான் திருமுடிக் காரி.
இந்தப் புதினத்தில், அவன் ஆட்சி முறை, மக்கள் மீதான நேசம், போர்களில் தோல்வி காணாத வல்லமை, இரவலர்க்கு வாரி வழங்கிய வள்ளன்மை, புலவர்கள் மீதும் தமிழ் மீதும் கொண்டிருந்த பற்று, காதல் எனப் பலவற்றையும் இன்தமிழில் சித்திரித்து. கடந்த காலத்தை நிகழ்காலத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் நாவலாசிரியர் அசோக்குமார்.
அற்புதமான கவித்துவ நடையிலமைந்த, வாள் முனையினும் கூர்மையான வசனங்களும் சொற்களின் ஆளுமையும் தமிழுக்கு மெருகேற்றுகின்றன. மலைத் தேனையொத்த இனிய உவமைகள் வாசிப்பில் மலைப்பைக் கூட்டுகின்றன. நாவலின் போக்கில் நாமும் நம்மையொரு கதாபாத்திரமாகப் பொருத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்தப் பிரதி உருவாக்குகிறது.
நான் காரியாக மாறவியலாது. எனவே, கபிலராக மாறிவிட்டேன். அதுதான் என் மனத்துக்கு இணக்கமானது. வாசித்துப் பாருங்கள். நீங்களும் ஒரு பாத்திரமாய் மாறுங்கள்; மாறுவீர்கள்.
-எப்போதும் அன்புடன் முனைவர் தமிழ்மணவாளன்
Be the first to rate this book.