யுகபாரதியின் காதல் கவிதைகள், மொழியின் சாத்தியத்திலிருந்து பிறப்பவை அல்ல. சமகால வாழ்விலிருந்தும், அது சம்பவிக்கும் நிகழ்வுகளிலிருந்துமே உருவாகுபவை.ஒன்றேபோல் இன்னொன்று எனும் தொனியை அவர் அறவே தவிர்த்துவிடுகிறார்.
இன்றைய நவீன கவிதைகள், உரைநடைக்கு மிக அருகில் வந்துவிட்ட போதிலும் இயல்பாகக் கவிதைகளில் இயைந்துவரும் ஓசையை அவர் வலிந்து விலக்குவதில்லை. பெரும்பாலோர் சொல்லாமல் விட்ட பகுதியிலிருந்தே தன் கவிதைகளை அவர் திறந்து கொள்கிறார்.
சாராய நெடியும், மாமிச வாடையும் அவர் கவிதைகளில் உண்டு. கொடியடுப்பில் குடல்கறி வேகக் கண்டதும், காதலில் குதூகலிக்கும் சொந்தங்களை கவிதைகளில் அவரால் மகிமைப்படுத்த முடிகிறது. எளிய மனிதர்களின் வாழ்வுடன் ஊடாடும் காதலை நூல் நெடுக நிறைத்திருக்கிறார்.
இளம்வயதில் யார் வீட்டு விசேஷத்திற்கோ போனபோது அங்கே யாராலோ எதேச்சையாக எடுக்கப்பட்ட ஒளிப்படத்தைப் பார்த்ததைப்போல ஒருவித கூச்சமும் குறும்பும் இக்கவிதைகளில் தென்படுகின்றன. அந்தந்த நேரத்தில் தோன்றிய மாய உணர்வுகளை மறைக்காமலும் குறைக்காமலும் தந்திருக்கிறார்.
Be the first to rate this book.