நெஎழிலார் தமிழ் எடுத்து, எண்ணத்தை எழுத்து வண்ணமாகக் குழைத்தளித்துக் குறளுக்குக் கருத்தோவியங்கள் தீட்டுவதில் எனக்குத் தயக்கமில்லை; தடங்கல் குறுக்கிட்டதுமில்லை!
குறளோவியம் எழுதிடப் புதிதாகப் பயிற்சி பெறவில்லை. நாற்பது ஆண்டுக் காலமாக நான் பல்வேறு கோணங்களில் வளமை மிகு தமிழ் மொழியைப் படம் பிடித்துக் காட்டி வருவதன் தொடர்ச்சியே இந்த நூல். உரைநடையில் குறட்பாக்களை மலர் மாலையாக ஆக்கியோர் உளர்.
செய்யுள் செய்து குறளுக்குப் பொருள் உரைத்தோர் உளர்.சுருக்கமாகச் சுவையாகக் குறளுக்குப் பொழிப்புரை புகன்றோர் உளர்! இசைத் தமிழால் இனிய குறளைச் செவி வழி பாயச் செய்து சிந்தை குளிர்விப்போர் உளர்!
இவற்றுக்கிடையே என் பங்காக, நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி, நிழல் தரும் குளிர்தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும் நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும் நீள் விழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்கமிகு உணர்ச்சித் தமிழிலும் குறட்பாக்களை உங்கள் முன்னால் உலவ விட்டிருக்கிறேன்.
-முகப்புரையில் கலைஞர் மு.கருணாநிதி
Be the first to rate this book.