''சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்" என்ற வள்ளுவர் அதே அதிகாரத்தில் உழவுத் தொழிலில் கால்நடை எருவின் முக்கியத்துவம் குறித்தும் பதிவு செய்திருக்கிறார். உலகின் பசியைப் போக்கிட வேளாண்மைத் தொழில் செய்யும் உழவர்களின் நிலத்தில் கால்நடை எருவின் தேவைக்காகக் கிடை அமர்த்தும் கீதாரி இனத்தின் வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கிறது இந்தப் படைப்பு. தென்தமிழகத்தின் நிலமெங்கும் உணர்வுமிகுதியால் புல்லரித்துக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. தோளுயரம் வளர்ந்த பிள்ளையைப்போலத் தூக்கிக் கொஞ்சும் அளவு எடையுள்ள ஆடுகளின் குளம்படிகள்தான் அந்தப் பூமியின் புல்லரிப்பிற்குக் காரணம். சாலைகள், வயல்கள், வரப்பு மேடுகள், காடுகளென அந்தக் கால்கள் அளந்திடாத வெளி எங்கும் இல்லையெனும் அளவிற்குப் பரவலான ஓர் உறவு விளைநிலங்களுக்கும் மேய்ச்சல் குடிகளுக்கும் உண்டு. அந்தக் கிடை வாசமும் நம்மை உரசி விளையாடும் ஆடுகளின் குறுகுறுப்பும் அதே புல்லரிப்பும் மீண்டும் உணரத் தூண்டுவதாய் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
Be the first to rate this book.