நாட்டார் வழக்காற்றியலர் ஆ. தனஞ்செயனின் நாடோடிகள்: வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும், சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும், தமிழில் இலக்கிய மானிடவியல், சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல் உள்ளிட்ட ஆய்வுப் படைப்புகளில் குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும் (திருத்தப்பட்ட பதிப்பு) குறிப்பிடத் தக்கது.
'மனித நாகரிகத்தின் கருப்பை' என்றும், சமய வாழ்வின் தொடக்கநிலை வடிவம்' என்றும், 'தனது மக்களின் கூட்டுச் சக்தியைப் பிரதிபலிக்கும் புனிதக் குறியீட்டின் மூலம், சமூகம் தன்னைத் தானே தெய்வமாக்கிக் கொண்ட நிலை' எனவும் நோக்கப்படும் சமூக - சமய ஒழுங்கமைப்பே குலக்குறியியலாகும். அது, மனிதனுக்கும் உலகப் பொருட்களுக்கும் இடையே உறவிருக்கிறது என்று நம்பிய புராதன மனிதனின் சிந்தனை முறை, தற்போதும் நீடிப்பதை உறுதிப்படுத்துகிறது. சாதியை விட, குலக்குறி பற்றிய நம்பிக்கை ஒழுங்கமைப்பு, அடித்தட்டு மக்களுக்கும் இயற்கைக்கும் இடையே பரிவிரக்கமும், உறுதியும் மிக்க உறவை ஏற்படுத்துகிறது. இது போன்ற பல சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் முன்வைத்த பல மானிடவியல் அறிஞர்களின் ஒரு நூற்றாண்டுக் கால முடிவற்ற ஆய்வுத் தேடல் பற்றிய வரலாற்றை இந்நூலின் முதற்பகுதி செறிவாக விவரிக்கிறது.
நூலின் பிந்தைய இரண்டு பகுதிகளிலுள்ள கட்டுரைகள், பண்டைய குலக்குறிச் சமூகமாக விளங்கிய பரதவர்களின் வழிமரபினரான இன்றைய மீனவர்களின் வாய்மொழி மற்றும் சமய மரபுகளை அடியொற்றிய அவர்தம் புராதன, நாட்டார் சமய வடிவங்களை அடையாளம் காணுவதற்கு, மானிடவியலும் நாட்டார் வழக்காற்றியலும் இணைந்த ஈரிடைப்புலச் சிந்தனைகள் விரவிய ஆய்வு முறையியல் எவ்வாறு ஓர் உரைகல்லாக உதவுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.
Be the first to rate this book.