கோலவிழியாள்
இரா.இரமேசு
கயப்பாக்கம் இரா.இரமேஷ் (இரமேசு) (06.06.1973) ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில், கயப்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்து, அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைப் படித்து முடித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை, (பிஎச்.டி. வரலாற்றுத் துறையில்) 'செய்யூர் வட்டத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டடக் கலை ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வினைச் செய்து வருகிறார். வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு துறைகளில் முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார். 1997-98 ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை ஆய்வாளர் (M.Phil )பட்டப் படிப்பினை முடித்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்லியல் துறையில் 2024 ஆம் ஆண்டில் ஒரு வருடப் பட்டயப் படிப்பினை முடித்து, தொல்லியல் மற்றும் கட்டடக்கலையில் சிறந்த நிபுணராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பள்ளிப் பருவத்திலேயே கவிதை எழுதுவதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட இவர், கல்லூரி காலகட்டத்தில் கவிதைகள் எழுதியும், பாடியும் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். அதனோடு அப்போதைய டி. ராஜேந்தரின் உஷா வார இதழில் வசனப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். இவரது எழுத்துப்பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தது. 2009 ஆம் ஆண்டில் 'தமிழோசையின் 'களஞ்சியம்' பகுதியில் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். கல்வராயன் மலைவாழ் மக்களைப் பற்றிக் குறுந்தொடர் ஒன்றினையும் எழுதியுள்ளார். இவரது முதல் புதுக்கவிதை நூல் சோற்றுக்காக நடந்தோம்' என்ற புத்தகம் 'கவிதை உறவு இலக்கிய இதழின் ஆசிரியரான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களால் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசினைப் பெற்றுள்ளது. மேலும் இவர் வரலாற்றுத் துறையில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அதில் மிகச் சிறந்ததாக உலக வரலாற்றுப் பேரவையின் Puthucherry World History Congress வெளியீடுகளில் அதிக பார்வையாளரைக் கொண்ட கட்டுரையாக இன்றும் இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும். கவிஞராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் தொடர்ந்து எழுத்துத் துறையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.