இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் ஏதேனும் ஒரு பயணம் நிகழ்ந்துகொண்டே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். சாலைகளில் தூத்துக்குடிக்கும், சிவகாசிக்கும், திருநெல்வேலிக்கும், மதுரைக்கும் என்று வாகனங்கள் போய்க்கொண்டே இருக்க, பயணங்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. காலம் இந்தப் பயணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருக்கிறது. பயணங்களின் கதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கிறது.
நாம் கேட்கவிருப்பது ராஜாக்களின் கதைகளை மட்டுமல்ல, அவர்களின் மைனர் மகன்களின் கதை, தாத்தனின் கதை, பீமனின் கதை, அனுமனின் கதை, சிறு தெய்வங்களின் கதை, மந்திகளின் கதை, ஒரு தோப்பின் கதை, அதில் வசிக்கும் சாமியாரின் கதை, அவருடைய மகனுடைய கதை, கோர்ட்டார் கதை, பாட்டுக்காரர்கள் கதை, பாட்டாளியின் கதை, வக்கீல் கதை, டாக்டர்கள் கதை என்று உருமாறிக்கொண்டே போய் தீப்பெட்டியின் கதை, கடலைமிட்டாயின் கதை, காரச்சேவின் கதை, ஹாக்கி விளையாட்டின் கதை, வதை முகாமின் கதை என்று பயணப்பட்டுக் கொண்டே இருக்கப்போகிறோம்.
கோவில்களையும், எழுத்தாளர்களையும் பற்றி மட்டுமின்றி கழுகுமலைக் கலவரம், கொடியன்குளம் வன்செயல் பற்றியும் பேசித்தானே ஆகவேண்டும்!
Be the first to rate this book.