சூதாட்டம் எனும் மாயவலை விரிக்கும் வசீகரம் எக்காலத்துக்குமானது. வடிவங்கள் மாறினாலும், சூது மீதான ஈர்ப்பு மனிதனுக்கு ஒருபோதும் குறைவதில்லை. ‘கறுப்பு ஜோக்கர்’ இன்றைய தலைமுறையின் சாகசங்களையும், மயக்கங்களையும் பேசும் தனித்துவமான களம். நாவலில் ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டம் அதை உருவாக்கியவன், விளையாடுபவன் என இரண்டு இளைஞர்களின் கோணங்களில் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. மூன்றாவதாக, வெட்ட வெட்ட முளைக்கும் சூதாட்டத்தின் பல்வேறு வடிவங்களை ஆட்டுவிக்கும் கரங்களையும் அவற்றின் பின்னால் உள்ள சமூக அரசியலையும் பேசுகிறது நாவல்.
பாலகுமாரின் எழுத்து நடை புனைவின் நேர்த்தியும், திரைக்கதையின் சுவாரஸ்யமும் சரியான விகிதத்தில் சேர்த்த கலவையாக அமைந்திருக்கிறது. ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஒரு சிறுகதைக்கான இலாகவத்துடன் கட்டமைத்த விதம், திரையில் காட்சிகள் ஓடுவதுபோல சொற்கள் பரபரவென நகர்ந்து செல்லும் வேகம், அடுத்து என்ன எனும் தொடரும் பரபரப்பு ஆகியவை சிறப்பான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
எத்தகைய திடமனம் கொண்டவனையும் சுண்டி உள்ளிழுக்கும் வசீகரச் செயலியை உருவாக்கி சூதாட வைக்கும் சூத்திரதாரியும், திறன் அடிப்படையிலான ஆட்டமென உள்ளிழுக்கப்பட்டு பொருளையும், நேரத்தையும், நிம்மதியையும் இழந்து இறுதியில் உயிரையும் உரசிப் பார்க்கும் பலவீனமான தருணங்களைக் கடக்கும் காரியதாரியும் இணைந்து விளையாடும் சூதாட்டம், ‘கறுப்பு ஜோக்கர்’.
Be the first to rate this book.