இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை இலக்கியத்திலே பாரதி பாரதிதாசனும், கவிமணி தேசிகவிநாயகமும் போல, கவிக்குயில் கண்ணதாசன் தமக்கென ஒரு தமிழ்ப் பாணி வகுத்துக் கொண்டவர் ஆவார்.
பாரதியின் பாணி புயற்பாணி. ஆனால் புயல் அவரை ஆட்கொள்ளவில்லை. அவரே புயலை ஆட்கொண்டவர்.
கவிமணியின் பாணி தென்றற் பாணி. ஆனால் இங்கும் தென்றல் அவரை ஆட்கொண்டு விடவில்லை. அவர்தாம் தென்றலை ஆட்கொண்டார்.
பாரதிதாசன் கூடப் புயலையும் தென்றலையும் மாறி, மாறி ஆட்கொண்டவர்தாம், புயலும் தென்றலும் அவரை ஆட்கொண்டதில்லை.
தென்பாண்டி தந்த தெம்மாங்குக் கவிஞன் கண்ணதாசன் இந்தக் கவிஞர்களுக்கெல்லாம் மாறுபட்டவர். அவர் மாந்தளிர் கொய்து சாறு மாந்தும் ஒரு மாங்குயில், ஆனால் புயலும் தென்றலும் மாந்தளிரை ஆட்டிப் படைப்பது போல, புயலிடையே தென்றலும், தென்றலிடையே புயலும் அவரை ஆட்டிப் படைக்கின்றன. அவரது புயல், தென்றல் பாணி இது!
தத்துவத்துக்கு மட்டும் கவிஞனல்லர், கண்ணதாசன், காதலுக்குக் கண்ணதாசன் என்றே வருங்காலம் கட்டுரைக்கும் எனலாம். மராத்திமொழியில் காதலின் எல்லா நிலைகளையும், படிகளையும், திருப்பங்களையும் இசை வண்ணம் படத் தீட்டிக் காட்டிய கவிஞராகப் பக்திக் கவிதையர் செல்வியாகிய மீரா விளங்குவது போல, தமிழகத்தில் ஓர் ஆண் வடிவ மீராவாக விளங்குபவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் ஒரு கம்ப நேசனாக விளங்குபவர், கம்பர் போலவே விருத்தத்தின் சந்தங்களை உணர்ச்சிக்கேற்ற நாடகத் திறம்பட வேறுவேறு மெட்டுக்களுடன் பாடுகிறார். ஆனால் புதுமையும் உண்டு.
Be the first to rate this book.