‘எந்த அறிவுச் செயல்பாட்டையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ளது எனக் கலைத்துப் போட்டுக் கலக வாசிப்புக்கு அடித்தளம் இடும் நூல்.’ — அ. மங்கை
கலகக்காரர் என்றதும் புத்தர், இயேசு, ஸ்பார்டகஸ், காந்தி, சே குவேரா போன்ற நாயகர்கள்தாம் உடனடியாக நம் நினைவுக்கு வருகின்றனர். அநீதிக்கு எதிராகப் போரிடும் குணம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் அழுத்தமான நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
பொதுப்புத்தியாகவே மாறிவிட்ட இந்தக் கருத்தைத் தலைகீழாகத் திருப்பிப்போடுவதே கலகப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.
வரலாற்றின் இண்டு இடுக்குகளைக் கவனமாக ஆராய்ந்து மறக்கடிக்கப்பட்ட சில முக்கியமான பெண் கலகக்காரர்கள்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது இந்நூல்.
டைட்டானிக் கப்பலிலிருந்து நூற்றுக்கணக்கானோரைக் காப்பாற்றிய மார்கரெட் டோபின், சென்னையில் முதல் தாற்காலிகத் திரையரங்கை நிறுவிய ஃப்ரீடா குளூக், தீப்பெட்டித் தொழிற்ச்
சாலை வேலைநிறுத்தத்தை முன்னெடுத்த சாரா சேப்மன், விக்டோரியா ராணிக்கு எதிர்ப்பிரகடனம் வெளியிட்ட பேகம் ஹஸ்ரத் மஹல், ‘லேடி எடிசன்’ பியூலா லூயிஸ் ஹென்றி,
உளவியல் துறையில் தன் தடத்தைப் பதித்த அன்னா ஃப்ராய்ட் என்று தொடங்கி வண்ணமயமான பல கலகக்காரர்கள் இதில் இடம்பெறுகிறார்கள்.
அடித்தட்டு மக்கள் வரலாறு, சமூக வரலாறு, பெண்ணியம் ஆகிய துறைகளை ஒரு புள்ளியில் இணைக்கும் முக்கியப் பணியை இந்நூலில் முன்னெடுத்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். அந்த வகையிலுமேகூட இது ஒரு கலகப் புத்தகம்தான்.
நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர், சமூக, பெண்ணிய ஆய்வாளர், வரலாற்றாளர், ஊடகவியலாளர், இணை நிறுவனர் ஹெர் ஸ்டோரிஸ். வரலாறு, தொல்லியல், இனவரைவியல், இனவரைவுத் தொல்லியல் உள்ளிட்ட தளங்களில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கிவருபவர். உள்ளூர், மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை. பண்பாட்டை முனைப்புடன் மக்களிடம் கொண்டு செல்பவர். 2024-ம் ஆண்டு பெண்ணியச் செயல்பாட்டுக்கான தேசிய லாட்லி ஊடக விருதையும், 2021-ம் ஆண்டு லாட்லி பிராந்திய விருதையும் வென்றுள்ளார். இவரின் 'ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை' நூல் சென்னை மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இவரின் 'வடசென்னை வரலாறும் வாழ்வியலும்' 2022-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதையும் தமுஎகசவின் சிறந்த தொன்மைசார் நூலுக்கான கே. முத்தையா விருதையும் பெற்றுள்ளது. முதல் பெண்கள், அறியப்படாத கிறிஸ்தவம், கலகப் புத்தகம், கிறிஸ்தவத்தில் ஜாதி. 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் பாதை அமைத்தவர்கள், பெயரற்றவர்களின் குரல் உள்ளிட்ட 14 நூல்களை எழுதியுள்ளார்.
Be the first to rate this book.