தமிழ் நவீன கவிதை இயக்கம் என்பதே மொழிபெயர்ப்புகள் வழியாக தன் செழுமையை அடைந்ததுதான் என்று தயங்காமல் சொல்லலாம். அந்நிய மொழிக் கவிஞர்கள் நம் மொழியை, நம் பண்பாட்டை அத்தனை ஆழமாகவும் நுட்பமாகவும் என்றும் பாதித்து வருகிறார்கள். உலகம் ஒரு கிராமமாகிவிட்ட இந்த உலகமயச் சூழலில் எம்மொழியின் கவிஞரும் நமக்கு அந்நியமானவரல்ல. கவிஞர் இன்பா இந்நூலில் 25 அந்நிய மொழிக் கவிஞர்கள் மற்றும் கவிதைகள் பற்றிய அறிமுகக் குறிப்பை கொடுத்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிஞர்கள் பலவகைப்பட்டவர்களாக இருப்பது இந்நூலின் தனித்துவம். உலகம் முழுதும் பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த கவிஞர்களின் குறிப்புகள் இவை. கவிகளின் உலகம் பிரத்யேகமானது. நுண்மையான அவர்களின் அகச் சலனங்களை, கவிதை எனும் விநோத உயிரியை அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள், இவ்வுலகோடு அவர்கள் எப்படி தொடர்புறுகிறார்கள் என்ற இயங்கியலை இன்பா நுட்பமாகத் தொட்டுக்காட்டுகிறார். ஒரு கவியைப் புரிந்துகொள்வது அல்லது ஏற்றுக்கொள்வது என்பது ஒரு விஷயமே அல்ல. ஒரு கவி நம்மிடம் எதிர்ப்பார்ப்பதும் அதுவல்ல. ஒரு கவி தன் சூழலுக்குள் எப்படி எதிர்வினை செய்கிறான் என்பதை அவதானிப்பதுதான் முக்கியம். அந்த அவதானம் புரிதலை அல்லது ஏற்பதைத் தரலாம். தராமலும் போகலாம். ஆனால், அவன் எதிர்வினைதான் அவனின் இருப்புக்கான ஆதாரம். அந்த அளவிலேயே கவியின் இருப்பு ஒரு சமூகத்தில் நிகழ்கிறது. இன்பா இக்கவிகளின் இருப்பினது உள்ளார்ந்த பொருண்மையை சுட்டிக் காட்டுகிறார். அதுவே இத்தொகுப்பை குறிப்பிடத்தகுந்ததாக்குகிறது.
- இளங்கோ கிருஷ்ணன்
Be the first to rate this book.