"ஊரார்! பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்துதானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்டதாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவைகள் ஊரார் ஊரார் என வீண் கிலி கொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு. ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன சாரதா? இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுத்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா?" என்றுதான் கூறுவர், ஏளனம் செய்வர், எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னை சமூகம் பகிஷ்காரம் செய்வர். ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலை கொள்ளவேண்டும். சாரதா, கேள் நான் சொல்வதை! நான் கண்ணிழந்தவன்; ஆனாலும், எனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள் இந்தச் சமுதாயத்தின் சித்திரங்கள். எனக்குப் புகட்டும் பாடம் இது தான்! சமுகம் திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும். தயங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து, அவர்களைப் பதைக்க வைக்கும்.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.