சமுதாயத்தின் உற்பத்திக்கான சக்தியாகத் திகழும் அவளுடைய நிலையை இன்றைய சமுதாய அமைப்பின் ஆதிக்கக் கோட்பாடுகளை நாலியும் பீலியுமாகக் குதறி எறிய முற்பட்டிருந்தும் ஒரு வார்த்தை கேட்கத் தெரியாதவளாகவே இருக்கிறாள். உயிரற்ற அணிகளால் கவர்ச்சி என்ற பொய்மையைத் தன்னில் ஏற்றிக்கொள்வதையே நல்வாழ்வுக் கான சாயுச்சியம் என்று கருதி, அதற்காகத் தனது ஏனைய மேன்மை நலங்களைப் பணயமாக்க அவள் தயங்குவதில்லை. கற்பொழுக்கம் என்ற கோலினால் அவளைக் குற்றுயிராக அடித்துக் குப்பையில் தள்ளினாலும், அந்த அடியை உவந்து ஏற்றுக்கொள்வது போல் தலைவணங்குவதுடன், குப்பையிலும் தானே வீழ்ந்ததாக, அந்தப் பழியையும் குற்ற உணர்வையும் தானே சுமக்கிறாள் இவளுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் அது இயங்குவது நின்று எத்தனையோ காலமாகிவிட்டது. அதில் இயற்கையான உயிரோட்டம் கிடையாது. குதிரைச் சேணம் போல் அவளுடைய அறிவுக் கண்களும் சேணம் சுமக்கின்றன. அந்தச் சேணங்களின் பார்வைக்கு உட்பட்டு, அவளது இயற்கை யான ஆளுமை மலர்ச்சி குறுக்கப்பட்டு -
ஏன் இந்த நிலை?
இந்த முடக்கம் எப்படி நேர்ந்தது?
ஒவ்வொரு படிக்கட்டிலும் இவளது அறிவியக்க மலர்ச்சி கட்டுப்படுத்தப்படுவது எதற்காக?
இவள் தன்னைத்தானே உணர இயலாதபடி, பிறவி எடுத்த நாளிலிருந்து ஒருவனுக்காக என்ற கருத்தைச் சுமக்க வைப்பதன் காரணம் என்ன?
- ராஜம் கிருஷ்ணன்
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம் கிருஷ்ணன் உலகம் போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்!
Be the first to rate this book.