1900களிலிருந்து நவீனத் தமிழ் நாவல்கள், ஏராளமாகப் பிரசுரமாயின. 1910க்குப் பிறகு தமிழில் சிறுகதைகளும் பிறந்து வளரத்தொடங்கிவிட்டன.
இப் புனைகதைப் பெருக்கத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண் எழுத்தாளர்களும் தம் பங்கைச் செலுத்திவந்துள்ளனர். இந்த வகை முன்னோடிப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த முதல்வர் பண்டிதை விசாலாட்சி அம்மாள் (1881-1915). இவர் 1902லிருந்து இருபதுக்கு மேற்பட்ட நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். லோகோபகாரி பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் ஹிதகாரிணி என்ற தமது சொந்தப் பத்திரிகையின் ஆசிரியராகவும் அதன் வெளியீட்டாளராகவும் அவர் விளங்கிவந்துள்ளார். இவ்வாறு, நாவலாசிரியராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் புத்தக வெளியீட்டாளராகவும் பதிப்பாசிரியராகவும் பல்துறைத் திறமை கொண்டு விளங்கிய முதல் பெண் எழுத்தாளர் இவர்தாம் என்று உறுதியுடன் கூறலாம். இவரது நாவல்கள், ஜனரஞ்கத் தன்மையை அதிகமாகவும் பெண்களின் சித்தரிப்பையே முதன்மை நோக்கமாகவும் குடும்ப உறவுகளை மையமாகவும் கொண்டிருந்தன. வை.மு.கோதைநாயகியின் முன்னோடியாக இவரையே சொல்ல முடியும்.
லலிதாங்கி, ஜலஜாட்சி, தேவீசந்திரப்ரபா, நிர்மலா, ஆனந்தமகிளா, ஹேமாம்பரி, சரஸ்வதி, கௌரி, ஞானரஞ்சனி, சுஜாதா, வனசுதா, விராஜினி, ஆரியகுமாரி, ஸ்ரீகரி, ஜெயத்சேனா, மகிசுதா, ஸ்ரீமதி சரசா, ஜ்வலிதாங்கி, இரட்டைச்சகோதரர், உமா, ஜோதிஷ்மதி, மகேசஹேமா, ராஜப்பிரபா போன்ற நாவல்கள் விசாலாட்சி அம்மாளால் இயற்றப்பட்டன.
பண்டிதை விசாலாட்சி அம்மாளின் பிற்கால நாவல்களின் பிரதிநிதித்துவம் கொண்ட படைப்பாக இந்த ஜெயத்சேனா (1911) நாவலைக் கூறலாம். இவ்வரிசையில் விசாலாட்சியின் ஆரியகுமாரி (1910) என்ற நாவலும் இத்துடன் வெளியிடப்பெற்றுள்ளது.
Be the first to rate this book.