இரண்டாம் குலோத்துங்கன் என்னும் பெயருடன் வெளிவரும் இச்சிறு நூல் வரலாற்றை உயிர்நாடியாகப் பெற்றிருப்பது. பிற்காலச் சோழர் என்ற விஜயாலயன் மரபினர் அனைவர் ஆட்சிக் காலத்திலும் சோழப் பெருநாடு ஓயாத போர்களையே கண்டு வந்தது. சோழர் சாளுக்கியர் ஆட்சிக் காலத்திலும் போர்களே நடைபெற்று வந்தன. 'போர்' என்ற சொல்லே கேட்கப்படாத காலமும் சோழர் ஆட்சியில் இருந்தது எனின், அக்காலம் நமது இரண்டாம் குலோத்துங்கன் காலமே என்னலாம்.
இப்பெருமகனது ஆட்சியில் சோழப் பெருநாட்டுக் குடிமக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இஃது இப்பேரரசனுக்கு அமைந்த சிறப்பாகும். பிறிதொரு சிறப்பு. இவன் மிகவும் அழுத்தமான சிவபக்தன் என்பது. இவன் காலத்தில் சைவத் திருப் பணிகள் பலவாக நடைபெற்றன; இவன் தில்லையிற் செய்த திருப்பணிகள் பல.இவன் காலத்திற்றான் சைவத்தின் உயிர்நாடியாக வுள்ள திருத்தொண்டர் புராணம் செய்யப்பட்டது. இவன் சென் தமிழ்க் புலவனாக இருந்தமை மற்றொரு சிறப்பாகும். செந்தமிழ்க் கவிமணியாகிய ஓட்டக்கூத்தரைத் தன் புலவர் அவைத் தலைவ ராகவும், சிவக் கவிமணி ஆகிய சேக்கிழார் பெருமானைத் தன் பேரரசுக்கேற்ற அமைச்சராகவும் பெற்ற இவனது பேறு-சோழர் மரபினர் வேறெவரும் பெறாத பேறாகும்.
இவனது காலத்தில் சைவ முதற் காவியமாகிய பெரிய புராணம், இவன் பெயர் கொண்ட உலா, பிள்ளைத்தமிழ், தண்டி அலங்காரம் என்ற நூல்கள் செய்யப்பட்டு இலக்கிய இலக்கண வளர்ச்சி உண்டானது சிறப்பானதாகும். அங்ஙனமே சைவ சமயமும் பெரிய புராண வெளியீட்டால் பெருஞ் சிறப்பு எய்தியது.
இங்ஙனம் மொழி, சமயம் என்ற இரண்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட இத்தமிழ்ப் பெரு மகனது வரலாறு. தமிழராகிய நாம் படித்து உணரத்தக்கதன்றோ?இச்சோழர் பெருமானது திருப்புகழ் நீடு நிலவுவதாக!
-மா.இராசமாணிக்கம்
Be the first to rate this book.