ஏழைத் தொழிலாளிகள் சாமான்யத்திலே தமது ஜீவனாதாரமாகிய தொழிலைக் கைவிடமாட்டார்கள். மேலே முதலாளிகள் பொறுக்க முடியாத நிஷ்டூரங்கள் செய்தால்தான் இவர்கள், 'என்ன வந்தாலும் சரி. நான் இவனிடம் வேலைக்குப் போக மாட்டேன்' என்று பிடிவாதம் செய்யக் கூடிய நிலைமை ஏற்படும்.
அவர்கள் கையிலே வேலை நிறுத்துவதைத் தவிர வேறே ஆயுதமில்லை. ஸகலவிதமான பலங்களும் முதலாளி பக்கத்திலே யிருக்கின்றன. ஆதலால், தொழில் நின்ற பிறகும் முதலாளி இலேசாக ஸமாதானத்துக்கு வரமாட்டான். தொழிலாளிகளின்
வேண்டுதல்களுக்கு அவன் இணங்க மாட்டான்.
எப்படியும், இவர்கள் வறுமையின் கொடுமையால் நமது காலில் வந்து விழுவார்கள் என்பதை அவன் அறிந்திருக்கின்றான். படிப்பு, அறிவு, யோசனை, பொருள் முதலிய அனைத்தும் முதலாளி பக்கத்திலிருக்கின்றது. தொழிலாளி பக்கத்திலே அந்த ஸௌகரியங்களில் ஒன்றுமேயில்லை. இந்த நிலையில் பொதுஜனச் சார்பும் முதலாளி பக்கத்தைச் சேர்ந்து விடுமானால் தொழிலாளியின் பாடு அதோகதியாய் விடும்.
ஆதலால், ஏழைத் தொழிலாளிகள் வேறு உபாயமறியாமல் வேலை நிறுத்தும்போது, பொது ஜனங்கள் அவர்களிடம் கோபம் கொள்ளாமலிருப்பது மட்டுமேயன்றி, அவர்களுக்குத் தம்மால் இயன்ற ஸௌகரியங்களெல்லாம் செய்து கொடுக்க வேண்டும்.
- மகாகவி பாரதியார்
Be the first to rate this book.